உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொட்டும் மழையில் வசந்த உற்சவம்; தியாகராஜர் கோவிலில் கோலாகலம்

கொட்டும் மழையில் வசந்த உற்சவம்; தியாகராஜர் கோவிலில் கோலாகலம்

திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவிலில், வைகாசி மாதத்தில் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 23ம் தேதி, வசந்த உற்சவம் துவங்கி கோலாகலமாக நடந்து வந்தது.

நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு, தியாகராஜ சுவாமி – திரிபுர சுந்தரி தாயார், மயில்களுடன் மலர் அலங்காரத்தில், கேடயத்தில் எழுந்தருளினர். சுவாமி புறப்பாடாகும் போது, திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பின், 9:00 மணியளவில் சற்று ஓய்ந்து லேசான துாறல் விழுந்தது. இதையடுத்து, சுவாமி புறப்பாடு துவங்கியது. கோவில் வளாகத்தில் தேங்கிய மழைநீரில், சுவாமியை துாக்கியபடி சிவன் தாங்கிகளும், பக்தர்களும் அணிவகுத்தனர். பின், வடிவுடையம்மன் சன்னிதி முன், சாம்பிராணி துாபமிட, கயிலாய வாத்தியங்கள் முழங்க, சுவாமி மும்முறை திருநடனம் புரிந்தார். அப்போது, சாமந்தி, ரோஜா, அரளி, மல்லிகை போன்ற வண்ண மலர்கள் துாவப்பட்டன. பின், சுவாமி புறப்பாடாகி, கோவில் ராஜகோபுரம் முன்பிருக்கும், 16 கால் மண்டபத்தை சுற்றி, கோவில் வளாகத்தை வந்தடைந்தது. கொட்டும் மழையிலும், தியாகராஜ சுவாமி திருநடனம் வெகு விமரிசையாக நடந்ததை கண்டு, பக்தர்கள் லயித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !