தமிழகத்தில் 211 கோவில் திருப்பணி: வல்லுனர் குழு ஒப்புதல்
 சென்னை; தமிழகத்தில் தொன்மையான, 211 கோவில்களில் திருப்பணி துவங்குவதற்கு, வல்லுனர் குழு நேற்று ஒப்புதல் அளித்தது.
சென்னை நுங்கம்பாக்கம், ஹிந்து சமய அறநிலையத்துறை தலைமையகத்தில், நேற்று தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான, வல்லுனர் குழு கூட்டம் நடந்தது. இதில், கும்பகோணம் லட்சுமி நாராயண பெருமாள், திருநாகேஸ்வரம் சந்தன மாரியம்மன், கல்லாங்குடி காளீஸ்வர விநாயகர், கானாடுகாத்தான் கரைமேல் அய்யனார், திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர், மயிலாப்பூர் அங்காளபரமேஸ்வரி. கொண்டித்தோப்பு செல்வ விநாயகர், கொத்தவால் பஜார் ஆதிகேசவ பெருமாள் பாஷ்யகார சுவாமி, சைதாப்பேட்டை கடும்பாடி சின்னம்மன் கோவில் உள்ளிட்ட, 211 கோவில்களில் திருப்பணிகள் துவங்குவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இக்குழு பரிந்துரையின் அடிப்படையில், கோவில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவக்கப்பட உள்ளன. இதுவரை தமிழகத்தில், 8,848 கோவில்களில் திருப்பணிகள் துவங்குவதற்கு, மாநில அளவிலான வல்லுனர் குழுவின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அறநிலையத்துறை திருப்பணி இணைக் கமிஷனர் ஜெயராமன், ஆகம வல்லுனர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.