உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் காளைக்கு சிலை அமைத்து வணங்கும் கிராமத்தினர்

கோயில் காளைக்கு சிலை அமைத்து வணங்கும் கிராமத்தினர்

திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் ஒன்றியம் திருக்கோஷ்டியூர் வடக்கு தெரு ஊத்துப்பட்டியில் இறந்த கோயில் காளைக்கு கிராமத்தினர் சிலை அமைத்து திறப்பு  விழா நடத்தினர்.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு 1983 ல்  நேர்த்தி கடனாக செலுத்தப்பட்ட கன்று குட்டியை வளர்க்க ஊத்துப்பட்டி கிராமத்திடம்  கோயில் நிர்வாகம் பரிந்துரைத்தது. கிராமத்தினரும் கன்றுக்கு ‛ மொட்டு வால்’  என்று பெயரிட்டு மஞ்சுவிரட்டு காளையாக வளர்த்தனர். இப்பகுதியில் நடக்கும் மஞ்சுவிரட்டுக்களில் நின்று விளையாடி பார்வையாளர்களை கவர்ந்தது. பல இடங்களி்ல களம் வென்ற காளையாக திரும்பியதால் கிராமத்தினர் அனைவரும் காளையை நேசித்தனர். வீட்டுக்கு, வீடு சென்று வைகோல், பருத்திக்கொட்டை, தண்ணீர் என இந்த காளை உணவு எடுத்துக் கொள்ளும். கடந்த 2010 ல் வயது முதிர்வினால் காளை இறந்தது. இருப்பினும் அதன் சாகசங்கள் கிராமத்தினரின் நினைவுகளை விட்டு அகலவில்லை. இதனால் காளையை நினைவு கூற கிராமத்தினர் ஆலோசித்து  ஊர் மந்தையில் சிலை வைக்க முடிவானது. 14 ஆண்டுகளுக்கு பின் சிலை நிறுவு அதற்கு கோபுரம் கட்டியுள்ளனர்.

நேற்று திறப்பு விழாவை முன்னிட்டு  கரந்தமலை அழகர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து சவுமியநாராயண பெருமாள் கோயிலில் அர்ச்சனை செய்தனர்.  பின்னர் ஊர்வலமாக சென்று கிராம தெய்வங்களுக்கு  சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் சிலைக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. கிராமத்தினர் பரவசத்துடன் மாலைகளை அணிவித்து காளையை வணங்கிச் சென்றனர். தொடர்ந்து அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாட்டினை  திருக்கோஷ்டியூர் வடக்கு தெரு கிராமத்தினர், இளைஞர்கள், சிங்கப்பூர் வாழ் இளைஞர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !