ஆவல்சூரம்பட்டி செல்லும் 24 அடி உயர பழநி கருப்பசாமி சிலை
பழநி; பழநி அடிவாரம் பகுதியில் 24 அடி உயரம், 45 டன் எடையுள்ள கருப்ப சாமி சிலை தயாராகி விருதுநகர் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.பழநி, அடிவாரம், கிரி வீதி பகுதியில் உள்ள சிற்பக் கலைக்கூடத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கரூரிலிருந்து 70 டன் உடைய கல் கொண்டு வரப்பட்டது. விருதுநகர் மாவட்டம் காவல் தெய்வம் கருப்பசாமி சேவா சங்கம் சார்பில் உயரமான சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. சமூக வலைத்தளத்தில் குழுவாக தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் இணைந்தனர். பழநியில் கருப்புசாமிக்கு கற்சிலை செய்ய முடிவு செய்தனர். கரூரிலிருந்து கொண்டுவரப்பட்ட 70 டன் எடையுள்ள கல்லில் உயரம் 21 அடி சிலை மற்றும் பீடம் 3 அடியுடன் சேர்ந்து 24 அடி உயரத்தில், தமிழகத்தில் உயரமான கருப்பசாமி, கற்சிலை தயாரானது. இதன் எடை 45 டன் உடையது. கையில் அரிவாள் ஏந்திய நிலையில் நின்ற கோலத்தில் கருப்பசாமி சிலை அமைக்கப்பட்டு இருந்தது. பூஜை செய்து இரண்டு கிரேன்கள் கொண்டுவரப்பட்டு லாரியில் ஏற்றி, சித்தூர்- புளியங்குளம் ரோடு, ஆவல்சூரம்பட்டி பகுதியில், மதுரை-கன்னியாகுமரி பைபாஸ் ரோடு அருகே அமைய உள்ள கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.