நாமக்கல் நரசிம்மர் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
நாமக்கல் நாமக்கல் நகரில் நடந்த பங்குனி தேரோட்ட திரு விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாமக்கல் மலையின் மேற்கு புறத்தில், நாமகிரி தாயார் உடனுறை நரசிம்மசாமி கோவில் உள்ளது. இங்கு லட்சுமி நரசிம்மர், மூலவராக மலையை குடைந்து குடவறை கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலிக்கு நேர் எதிர்புரத்தில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். மலையின் கிழக்கு பகுதியில் அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு கார்க்கோடகன் என்ற பாம்பின் மீது, ரங்கநாதர் அனந்த சயன நிலையில் மலையை குடைந்து குடவறை கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், இந்த மூன்று தெய்வங்களுக்கும் ஒரே நாளில் தேர்த்திருவிழா நடைபெறும்.
நடப்பாண்டு இந்த தேர்த்திருவிழா மார்ச் 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 31ம் தேதி நாரசிம்மர் கோவில் வளாகத்தில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு, சுவாமிக்கு மொய் சமர்ப்பித்து வழிபட்டனர். ஏப்., 1ம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து வேடுபரி உற்சவம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நரசிம்மர் சுவாமி தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக நாமகிரி தாயார் மற்றும் நரசிம்மர் சுவாமிக்கு அபி ஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தேர் சக்கரங்களுக்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 4:00 மணிக்கு நாமக்கல் மெயின் ரோட்டில் உள்ள, அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் சுவாமி தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு, நாமக்கல் நகரில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. விழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம், நீர்மோர், பானகம், தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.