உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆக.29ல் கொடியேற்றம்
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமையப்பட்டுள்ளதால், இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கோயிலில் ஆண்டு தோறும் பத்து நாட்கள் சதுர்த்தி விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இக்கோயில் சதுர்த்தி விழா ஆக.29 இல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று முதல் தினமும் மாலையில் வெள்ளி மூஷிக வாகனம், கேடயம், சிம்ம, மயில், யானை, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவின் தொடர்ச்சியாக விழாவின் எட்டாம் நாளான செப்.5ல் சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மறுநாள் தேரோட்டம் நடைபெற்று செப். 7 ல் நடைபெறும் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் சதுர்த்தி விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் மற்றும் உப்பூர் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.