சிதம்பரம் நடராஜர் கோவில் உண்டியல் திறப்பு!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் கடந்த, 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகிறது. அதைத் தொடர்ந்து, பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, கோவில் வளாகத்தில் ஒன்பது இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுகிறது. நேற்று 20வது முறையாக, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. நிர்வாக அதிகாரி சிவகுமார், ஆய்வாளர் தங்கராஜ் மேற்பார்வையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோவில் வளாகத்தில் இருந்த ஒன்பது உண்டியல்களில், 5 லட்சத்து, 16 ஆயிரத்து, 494 ரூபாய் காணிக்கை இருந்தது. மேலும், மலேசியா ரிங்கட் 23, அமெரிக்கா டாலர் ஒன்று, சிங்கப்பூர் டாலர் நான்கு ஆகியவை இருந்தன. கோவிலில் உண்டியல் வைக்கப்பட்ட தினத்திலிருந்து இது வரை பக்தர்கள் உண்டியல் காணிக்கை மூலம், ஒரு கோடியே, 5 லட்சத்து, 61 ஆயிரத்து, 752 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.