குழிப்பாந்தண்டலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்
ADDED :628 days ago
மாமல்லபுரம்; மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில், பிரசித்தி பெற்றது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் தோஷ பரிகார நிவர்த்திக்காக, ஆண்டுதோறும் பவித்ரோற்சவம் நடத்தப்படும். இந்த உற்சவம், நேற்று முன்தினம் மாலை அங்குரார்ப்பணம், முதல்கால ஹோமம், வாஸ்து ஹோமம் உள்ளிட்ட சடங்குகளுடன் துவக்கப்பட்டது. நேற்று காலை, சுவாமி திருமஞ்சனம் கண்டார். பின்னர் நடந்த ஹோமத்தைத் தொடர்ந்து, லட்சுமி நாராயண பெருமாள், மகாலட்சுமி தாயார், ஆண்டாள், ஆழ்வார் ஆச்சாரியார்கள், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமியருக்கு, பவித்ரம் சாற்றப்பட்டு வழிபாடு நடந்தது. மாலை ஹோமம், இரவு மஹா பூர்ணாஹூதி நடத்தி, கும்பம், உற்சவர் ஆலய பிரதட்சணம் நடந்தது. திரளான பக்தர்கள் இதில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.