திருக்கோஷ்டியூரில் வைகுண்ட ஏகாதசி விழா ராப்பத்து உற்ஸவம் நிறைவு
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 20 நாட்கள் நடந்த திருஅத்யயன உற்ஸவம் நிறைவடைந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் இப்பெருவிழாவின் தொடக்கமாக பகல்பத்து உற்சவம் டிச.31ல் துவங்கியது. தினசரி மூலவர் சன்னதியில் பெருமாளுக்கு தீபாராதனை நடந்து அருள்பாலித்தார். ஜன.9 ல் பகல் பத்து உற்ஸவம் நிறைவடைந்தது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன.10 இரவில் பரமபத வாசல் திறக்கப்பட்டு பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவியருடன் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சியளித்தார். தொடர்ந்து ராப்பத்து உற்ஸவத்திற்கு காப்பு கட்டி உற்ஸவம் துவங்கியது. மாலையில் பெருமாள் தாயார் சன்னதி எழுந்தருளி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அருள்பாலித்தார். நேற்று காலை 10:00 மணி அளவில் பெருமாள் தாயார் சன்னதி எழுந்தருளினார். தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு நம்மாழ்வாருக்கு அருள்பாலித்தார். பின்னர் மாலையில் உற்ஸவர் தென்னமரத்து வீதி புறப்பாடு நடந்து ராப்பத்து உற்ஸவம் நிறைவடைந்தது. ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் உள்ளிட்டோர் செய்தனர்.