சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் கொடிமரம் கும்பாபிஷேகம்
அன்னூர்; சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில் கொடிமரம் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.சித்தர்கள் வழிபட்ட, பழமையான, சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில் புதிதாக கொடிமரம் நிறுவப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலையில் வேள்வி பூஜை நடந்தது. காலை 5:30 மணிக்கு கொடி மரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. காலை 7:00 மணிக்கு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது. பழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கட்டளைதாரர்கள், கோவில் கமிட்டியினர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வருகிற 10ம் தேதி வரை தினமும் பழனி ஆண்டவருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. 11ம் தேதி காலை விநாயகர் வழிபாடும், மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேக, அலங்கார பூஜையும், மதியம் கோவில் வளாகத்தில் காவடி செலுத்துதலும், மடிச்சோறு எடுத்தலும், பஜனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.