பிள்ளைவயல் காளி கோயில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சிவகங்கை; சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது. ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில், அறங்காவலர் குழுவினர் உபயதாரர்கள் நிதி உதவியுடன் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி நிறைவுக்கு பின் பிப்.,8 ம் தேதி கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் காலை அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. தொடர்ந்து முதல் யாகசாலை பூஜையில் இருந்து 4 கால யாகசாலை பூஜைகள் வரை நடந்தது. இன்று காலை 5:30 மணிக்கு 4 ம் கால யாகசாலை பூஜை, அதனை தொடர்ந்து யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது. பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் ராமசுப்பிரமணியராஜா உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் விநாயகர், முருகன், காளியம்மன் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலை வரை பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இரவு பிள்ளைவயல் காளியம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.