திருத்தணி முருகன் கோவிலில் வைகாசி கிருத்திகை; அலைமோதிய பக்தர்கள்
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இன்று வைகாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை தரிசித்தனர்.திருத்தணி முருகன் கோவிலில், இன்று வைகாசி கிருத்திகை விழாவை முன்னிட்டு, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் வந்து மூலவரை தரிசித்தனர்.இவ்விழாவை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்க கல், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசித்து செல்கின்றனர். நேற்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கத்திற்கு மாறாக மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதன் காரணமாக, பொது வழியில் மூலவரை தரிசிக்க இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அதே போல், இன்று வைகாசி கிருத்திகை விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காத்திருந்து தரிசனம் செய்தனர்.