பாழடைந்த விநாயகர் கோவிலை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை
ADDED :263 days ago
மீஞ்சூர்; மீஞ்சூர் அடுத்த தமிழ்கொரஞ்சூர் கிராமத்தில், 200ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆயிரம்காத்த விநாயகர் கோவில் உள்ளது. கோவில் சன்னிதி, முகப்பு மண்டபம், சன்னிதி கோபுரம் என அனைத்தும் கருங்கற்கள் கொண்டும், சுண்ணாம்பு, சிறிய அளவிலான செங்கற்கள் ஆகியவற்றை கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. பழமை வாய்ந்த ஆயிரம் காத்த விநாயகரை, இங்குள்ள கிராமமக்கள் வழிபட்டு வந்த நிலையில், கடந்த, 20 ஆண்டுகளாக பாழடைந்து உள்ளது. கோவிலின் முகப்பு மண்டப துாண்கள் மற்றும் சுவர்கள் சேதம் அடைந்தும், வளாகத்தை சுற்றிலும் புதர் சூழ்ந்துள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, பழமை மாறாமல் புனரமைக்க நடவடிக்கை வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.