காளஹஸ்தி தர்மராஜ சுவாமி கோயிலில் அர்ஜுனன் தபசு கோலாகலம்
காளஹஸ்தி; திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோிலான திரௌபதி சமேத தர்மராஜ சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோத்சவத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை மாலை அர்ஜுனன் தபசு விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கௌரவர்களை எதிர்த்துப் போரிட பாசுபதாஸ்திரத்திற்காக அர்ஜுனன் தவம் செய்த கதையை அடிப்படையாக கொண்டு இந்த விழா நடைபெற்றது. முன்னதாக அர்ஜுனரின் உற்சவ சிலை அழகாக அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது, அங்கு பூசாரிகள் சிறப்பு பூஜைகள் செய்தனர். அர்ஜுனர் வேடமணிந்த பக்தர் பனை மரத்தின் ஒவ்வொரு படியாக ஏறி, இறைவனைப் பிரார்த்தனை செய்தார். மரத்தின் மேல் பகுதிக்கு ஏறியப் பிறகு, அவர் தன்னுடன் கொண்டுச் சென்ற எலுமிச்சை பழங்கள் மற்றும் விபூதியை கீழே வீசினார். இந்த எலுமிச்சை பழங்களை வீட்டின் பூஜை அறையில் வைத்திருந்தால், விருப்பம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் பக்தர்களிடையே எலுமிச்சை பழத்திற்காக போட்டி ஏற்பட்டது. காலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.