திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சந்திர கிரகண தீர்த்தவாரி
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சந்திர கிரகணம் முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் நள்ளிரவில் சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது. பக்தர்கள் புனித நீராடினர்:- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்தியும், நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் அக்னி, சூரியன் ,சந்திரன் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இன்நிலையில் சந்திர கிரகணம் முன்னிட்டு தீர்த்த கரையில் எழுந்தருளிய அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அஸ்திர தேவர் மூன்று தீர்த்த குளங்களிளும் தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது , இந்நிகழ்வின் போது திரளான பக்தர்கள் தீர்த்த குளங்களில் நீராடி வழிபட்டனர்.தொடர்ந்து சுவாமி, அம்பாள் ,அகோர மூர்த்தி உள்ளிட்ட மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.