கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம் பாலக்காட்டில் யானைகள் அணிவகுப்பு
பாலக்காடு; பாலக்காடு குன்னத்துார்மேடு கிருஷ்ணர் மற்றும் பாலமுரளி கோவிலில், அலங்கரிக்கப்பட்ட ஒன்பது யானைகளில், கிருஷ்ணனின் தங்கச்சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பாலக்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குன்னத்துார்மேடு கிருஷ்ணர் மற்றும் பாலமுரளி கோவிலில், அலங்கரிக்கப்பட்ட ஒன்பது யானைகளில், கிருஷ்ணனின் தங்கச்சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பாலக்காடு நகரில் மாலையில், பாலகோகுலம் என்ற அமைப்பின் சார்பில் ராதா-கிருஷ்ணர் வேடம் அணிந்த ஏராளமான சிறுவர் - சிறுமியர் பங்கேற்ற ஊர்வலம், சின்மயா தபோவனம் சந்திப்பில் இருந்து புறப்பட்டு, அரசு விக்டோரியா கல்லுாரி, மோயன் மாடல் பள்ளி, தலைமை தபால் அலுவலகம், சுல்தான்பேட்டை, கோர்ட் ரோடு வழியாக கோட்டை வாசலை அடைந்தது.
பாலக்காடு நகரில் உள்ள குன்னத்துார்மேடு ஸ்ரீ கிருஷ்ணர், பாலமுரளி, இடையார் தெரு கோபாலகிருஷ்ணர், சின்மயா தபோவன குருவாயூரப்பன், பிராயிரி தரவத்துபடி நவநீத கிருஷ்ணர், எலப்புள்ளி நவநீத கோபால கிருஷ்ணர், கண்ணாகுறுச்சி லட்சுமி சமேத மகாவிஷ்ணு, ஒற்றைப்பாலம் பூழிக்குன்னு ஸ்ரீ கிருஷ்ணர், கொல்லங்கோடு பயல்லுானர் ஸ்ரீ கிருஷ்ணர், குழல்மன்னம் மருதுார் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீகிருஷ்ணபுரம் ஸ்ரீ கிருஷ்ணர், லக்கிடி கொரட்டியில் ஸ்ரீ கிருஷ்ணர், பழம்பாலக்கோடு நாராயணமூர்த்தி, பய்யுருளி ஸ்ரீ கிருஷ்ணர், பட்டாம்பி மேற்கு மடம் குருவாயூரப்பன் கோவில்களில் விழா கொண்டாடப்பட்டது. குருவாயூர் கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி விழா துவங்கியது. காலை, 7:00 மணிக்கு, பெருவனம் குட்டன் மாரார் தலைமையிலான, 50க்கும் மேற்பட்ட வாத்தியக் கலைஞர்கள் செண்டை மேள வாத்தியங்கள் முழங்க, மூன்று யானைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, கிருஷ்ணர் வேடம் அணிந்த ஏராளமான சிறுவர் - சிறுமியர் பங்கேற்ற ஊர்வலம், மம்மியூர் கோவில் சன்னிதியில் இருந்து புறப்பட்டு, மதியம் கிருஷ்ணர் கோவிலில் வந்தடைந்தது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள், மேல்சாந்தி அச்சுதன் நம்பூதிரியின் தலைமையில் நடந்தன.
மிரண்ட யானையால் பரபரப்பு; பாலக்காடு குன்னத்தூர்மேடு ஸ்ரீ கிருஷ்ணர், பாலமுரளி கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழா அணிவகுப்பிற்கு வந்த யானை மிரண்டு ஓடியது. ‘செருப்புளச்சேரி மணிகண்டன்’ என்ற யானை காலை அணிவகுப்பின்போது மிரண்டு ஓடியது. சரியான நேரத்தில் பாகன்கள் தலையிட்டு யானையை கட்டிப்போட்டதால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தப்பியது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது. தொடர்ந்து கோவில் விழா நிகழ்ச்சிகள் நடந்தது.