பெருமாள் கோயில்களில் ஒலித்த கோவிந்தா, கோவிந்தா கோஷம்
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் வைகுண்டநாதர் அலங்காரத்தில் தாமரை பீடத்தில் அமர்ந்தபடி சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர்.
சிறப்பு பூஜைகள், சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.
போடி மேலச்சொக்கநாதபுரத்தில் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
கூடலுார்: அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள கூத்த பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுவாமிக்கு துளசி, தாமரைப்பூவில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கூடலுார், லோயர்கேம்ப், கம்பம், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
பெரியகுளம்: வரதராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு சுப்ரபாத சேவை நடந்தது. பால், தயிர், பன்னீர் சந்தனம் உட்பட 16 வகையான பொருட்கள் அபிஷேகம் செய்யப்பட்டது. பட்டு ஆடைகள் உடுத்தி ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மூலவர் வரதராஜப் பெருமாள் தீப ஒளியில் திருப்பதி வெங்கடாஜலபதிஅலங்காரத்தில்ஜொலித்தார்.
உற்ஸவர் பூதேவி, ஸ்ரீதேவியுடன் முத்தங்கி சேவை அலங்காரத்தில் காட்சியளித்தார். திருப்பாவை சேவித்தல், நட்சத்திர தீபாராதனை நடந்தது. பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ நாமம் ஒலிக்க வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் கண்ணன் செய்திருந்தார். பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதை துளசி அலங்காரத்தில் காட்சியளித்தனர்.15 மணி நேரம் அகண்ட நாமம் நடந்தது.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கிருஷ்ணசைதன்யதாஸ் செய்திருந்தார். பெரியகுளம் பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. லட்சுமிபுரம் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அர்ச்சகர் ராமானுஜர் பூஜைகள் செய்தார்.