இன்று சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை விரதம்; விநாயகர், முருகனை வழிபட நல்லதே நடக்கும்!
சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகரை வழிபட உகந்த நாளாகும், தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை எழுதியவர் இவர். மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். இவரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவர். எந்த சுபவிஷயத்தை செய்யத் தொடங்கினாலும், பிள்ளையாருக்கு சிதறுகாய் போட்டு, அப்பனே! விநாயகனே! தொடங்கும் செயல் தடையேதும் இல்லாமல் இனிதே நிறைவேற்றி அருள்வாய்! என்று வணங்கிவிட்டே செயல்படுவர். எழுதத் தொடங்கினாலும், பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு என்று குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்கள் வழிகாட்டுவர். தன் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதியவர் விநாயகர். சங்கடஹர சதுர்த்திநாளில் வணங்குவோருக்கு விநாயகப் பெருமானின் அருளால் செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும். விநாயகரை அருகம்புல் மாலை சாத்தி வழிபட நல்லதே நடக்கும்.
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. குறிஞ்சிக்கடவுளாகக் குமரன் முருகனே மலைகளின் மீது ஆட்சி செய்கிறார். தெய்வங்களின் உயர்ந்தவராகத் திகழ்வதால் அவரைத் தெய்வசிகாமணி என்று போற்றுவர். கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும், காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதம். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர் கந்த பெருமான். கார்த்திகையில் கந்தனை வழிபட துன்பம், கடன் தொல்லை நீங்கும். முருகன் கோயில்களில் விளக்கேற்றி வழிபட வேண்டும். அரோகரா சொல்லி ஆறுமுகனை வழிபட அனைத்தும் கிடைக்கும். கார்த்திகை நன்னாளில் முருகப்பெருமானை வணங்கி நற்பலன்கள் பெறுவோம்.