உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் கிரிவீதிகளில் சூரசம்ஹாரம்; வாழை தண்டு உட்கொண்டு விரதம் முடித்த பக்தர்கள்

பழநியில் கிரிவீதிகளில் சூரசம்ஹாரம்; வாழை தண்டு உட்கொண்டு விரதம் முடித்த பக்தர்கள்

பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.


பழநி முருகன் கோயில், திருஆவினன்குடி,பெரியநாயகி அம்மன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா அக்.22,ல் துவங்கியது. கந்த சஷ்டி திருவிழாவில் இன்று (அக்.27) கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. அதன்பின் மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்குதல் நடைபெற்று, கோயில் நடை அடைக்கப்பட்டது. பக்தர்கள் 11:00 மணிக்கு மேல் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து கட்டணங்களும் 11 30 மணிக்கு நிறுத்தப்பட்டன. சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் பழநி கோயில், திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில்களில் வாழை தண்டு, பழங்கள், காய்கறிகள், கலந்த படையலை வைத்து கந்த சஷ்டி கவசம் பாடி முருகனை வழிபட்டனர். அதன் பின் ஆறு நாட்கள் உபவாசம் இருந்த பக்தர்கள், முருகனுக்கு படைக்கப்பட்ட தண்டை உட்கொண்டனர்.


பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தேய்வானை உடன் முத்துக்குமார சுவாமி, கோயில் இருந்து சின்னகுமாரசுவாமியும் அடிவாரத்தில் எழுந்தருளினர். பராசக்தி வேல் மலையிலிருந்து இறங்கி திருஆவினன்குடி, குழந்தைவேலாயுதசுவாமி கோயிலில் வந்து அடிவாரம் சென்றடைந்தது. சின்னகுமாரசுவாமி சூரசம்ஹர நிகழ்விற்கு பாத விநாயகர் கோயிலில் இருந்து கிளம்பினர். வடக்கு கிரிவீதியில் தாரகாசுரன், கிழக்கு கிரிவிதியில் பானுகோபன், தெற்கு தெரு வீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் என பக்தர்கள் "வெற்றிவேல் வீரவேல்" கோஷத்துடன் சூரசம்ஹாரம் நடைபெற்றது. பழநியில் 4 சூரர்களும் கிரிவீதிகளில் நான்கு இடங்களில் சூரசம்ஹாரம் நடைபெறுவது சிறப்பானதாகும். சூரசம்ஹாரம் நடைபெற்ற பின்பு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடைபெற்றது. சின்னகுமாரசுவாமி, முத்துக்குமார சுவாமிக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது. மலைக்கோயிலில் இரவு சம்ரோட்சன பூஜை க்கு பின் அர்த்தஜாமபூஜை நடைபெற்றது.


நாளை (அக்.28) காலை 10.30 மணிக்கு மேல் கோயிலில் வள்ளி, தேய்வானை, சண்முகருக்கும் இரவு 7:00 மணிக்கு மேல் பெரியநாயகிஅம்மன் கோவிலில் வள்ளி, தேய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கும் கல்யாணம் நடைபெறும். அதன் பின் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. இன்று கந்த சஷ்டி விரதம் நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !