சபரிமலையில் நவ., 17 முதல் மண்டல கால பூஜை : 16ல் நடைதிறப்பு.. நவ., 29 வரை முன்பதிவு நிறைவு
சபரிமலை; மண்டல மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மறுநாள் மாலை திறக்கிறது. 17- ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும்.
கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை சபரிமலையில் ஒரு மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மண்டல காலம் வரும் 17- ம் தேதி தொடங்குவதை ஒட்டி நாளை மறுநாள் (16-ம் தேதி) மாலை 5:00 மணிக்கு நடை திறக்கிறது. கடந்த ஒரு ஆண்டு காலமாக சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்து வந்த மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் 18 படிகள் வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்ப்பார். தொடர்ந்து 18 படிகள் அருகிலிருந்து புதிய மேல் சாந்திகளான சபரிமலை -பிரசாத் நம்பூதிரி மாளிகைப்புறம் மனு நம்பூதிரி ஆகியோரை ஸ்ரீ கோயில் முன்பு அழைத்து வருவார். அவர்கள் இருவருக்கும் பிரசாதம் வழங்கப்படும். பின்னர் சிறிது நேரத்தில் இந்த மேல் சாந்திகளுக்கு தந்திரி மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்தி பதவி ஏற்க செய்வார். இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
17 - ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும். நவம்பர் 16 முதல் ஜனவரி 2026 ஜனவரி 10 -ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் இம்மாதம் 29- ம் தேதி வரை முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது. ஆன்லைன் முன்பதிவில் 70 ஆயிரம் பேரும் ஸ்பாட் புக்கிங்கில் 20 ஆயிரம் பேரும் தினமும் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் தங்குவதற்கான அறை ஆன்லைனில் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
https://www.onlinetdb.com என்ற இணையதளத்தில் பக்தர்கள் தங்க நினைக்கும் தினத்திலிருந்து 15 நாட்கள் முன்னதாக நள்ளிரவு 12 மணி முதல் முன்பதிவு செய்ய முடியும். பக்தர்களுக்கான வசதிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது திருவிதாங்கூர் தேவசம் போர்டின் பதவிகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய தலைவராக முன்னாள் கேரள அரசு தலைமைச் செயலர் கே. ஜெயக்குமார், உறுப்பினராக முன்னாள் அமைச்சர் ராஜு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் தேவசம்போர்டு அலுவலகத்தில் பதவியேற்கின்றனர்.