தினமலர் செய்தி எதிரொலி; அகத்தீஸ்வரர் கோவிலில் கொடி மரம் பிரதிஷ்டை
வில்லிவாக்கம்: வில்லிவாக்கம், அகத்தீஸ்வரர் கோவிலில், 18 லட்சம் ரூபாயில் கொடிமரம் புதுப்பித்து, இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வில்லிவாக்கத்தில் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள கொடிமரம் சேதமடைந்து இருந்ததால், அதை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். நம் நாளிதழிலும் செய்தி வெளியானது. இதையடுத்து, கொடிமரத்தின் செப்பு தகடுகள் சேதமடைந்ததாகவும், உள்மரம் நல்ல நிலையில் இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்தது. கடந்த பிப்., மாதம் மரம் சீரமைக்கும் பணியை துவங்கியது.
தொடர்ந்து இன்று புதிதாக கொடி மரத்தை அமைத்து, பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இதுகுறித்து, கோவிலில் செயல் அலுவலர் கூறுகையில், ‘உபயதாரர் நிதி 18 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொடிமரத்தில் செம்பு தகடுகள் பதிக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் நடக்கும் கும்பாபிஷேத்தில் குடமுழுக்கு செய்யப்படும்’ என்றார்.