உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பம் காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் : நாளை யாகசாலை பூஜைகள் துவக்கம்

கம்பம் காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் : நாளை யாகசாலை பூஜைகள் துவக்கம்

கம்பம்; கம்பம் காசி விஸ்வநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி நாளை (நவ. 27 ) காலை யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்குகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.


கம்பம் நகரின் மையப் பகுதியில் 10 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது கம்ப ராயப் பெருமாள் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில். ஒரே வளாகத்தில் சிவனும், பெருமாளும் தனித் தனி சன்னதிகளில் இருப்பது சிறப்பாகும். வலது கை சின்முத்திரையுடனும், இடது கையில் கமண்டலத்துடன் தட்சிணாமூர்த்தியும், ஆறு முகங்கள், 12 கைகளுடன் முருகனும், தெற்கு திசை நோக்கி பைரவரும் உள்ளனர். கோயில்களில் மேற்கு, தெற்கு திசை நோக்கி இருக்கும் பைரவர்கள் அதிக சக்தி கொண்டவர்கள் என புராணங்கள் கூறுகிறது. இவர்களுக்கு பூஜைகள் செய்யாவிட்டாலும், ஆற்றலுடன் இருப்பார்கள் என்கின்றனர். இக்கோயிலில் தெற்கு திசை நோக்கி பைரவர் வீற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயில் 22 ஆண்டுகளுக்கு பின் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் வரும் டிச. முதல் தேதி நடைபெறுகிறது. அதற்கான யாக சாலை பூஜைகள் நாளை ( நவ. 27 ) காலை துவங்குகிறது.


காலை 8 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, தன பூஜை, மகா கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக ஹோமங்களும் , மாலை 6 மணிக்கு பிரவேச பலி, ரக்ஷோக்ன ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத சங்கிரஹணம், 6.30 மணிக்கு பூர்ண ஹூதி, தீபாரதனையுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது. நவ . 28 மாலையில் யாகசாலை பிரவேசத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. நவ.29 ல் மூன்றாம் கால யாக பூஜையும், நவ. 30 ல் நான்காம் கால யாக பூஜையும், அன்று மாலை ஐந்தாம் கால யாக பூஜைகளும், டிச . முதல் தேதி காலை 6 முதல் 7 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். இந்த கும்பாபிநேகத்திற்கென கோயில் வளாகத்தில் , மூலவர் சன்னதி தெற்கு வாசல் அருகில் காசி விஸ்வநாதருக்கு 9 குண்டங்கள், விசாலட்சி அம்மனுக்கு 9 குண்டங்கள் , விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 8 குண்டங்கள் அமைக்கப்படுள்ளது. 


மேற்கு பக்கம் சுவாமி, அம்பாளுக்கும், கிழக்கு பக்கம் பரிவார தெய்வங்களுக்கும் இடைவெளி விட்டு யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அந்த இடைவெளியில் அமர்ந்து இரண்டு யாகசாலை பூஜைகளையும் பார்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . யாகசாலைகள் 100 அடி நீளமும், 50 அடி அகலத்திலும் பிரமாண்டமாய் அமைக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் - கோயில் பிச்சைக் குருக்கள் சர்வ ஜாதகத்தை கணித்துள்ளார். யாகசாலை பூஜைகள் சிவகணேசன் நடத்துகிறார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வீதியெங்கும் வண்ண விளக்குகளும், மாவிலை தோரணங்களும் கட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை எம்.எல்.ஏ.. இராமகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்முடி, மாவட்ட அறங்காவலர் உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன் மற்றும் அனைத்து சமுதாய தலைவர்கள் இணைந்து - மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !