உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை மகா தீபம்: குவியும் பக்தர்கள்.. களை கட்டியது திருவண்ணாமலை

கார்த்திகை மகா தீபம்: குவியும் பக்தர்கள்.. களை கட்டியது திருவண்ணாமலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் விழாவை யொட்டி, சுவாமி சன்னதி முன் கோவில் இரண்டாம் பிரகாரத்தில், பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்ட  மூன்று ஆயிரம் கிலோ  பூக்களால் அலங்காரம்  செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.


திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை நடக்கவுள்ள மஹா தீப திருவிழாவை முன்னிட்டு, 25 ஏக்கர் பரப்பளவிலுள்ள  கோவில் வளாகம் மற்றும் ஒன்பது கோபுரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இவை, 20 கி.மீ., தொலைவு  வரை தெரியுமளவிற்கு ஜொலிக்கின்றன. மேலும், கோவில் கொடிமர வளாகம் மற்றும் இரண்டாம் பிரகாரம், கிளி கோபுர நுழைவாயில் ஆகியவற்றில் வாழை மரங்கள், இளநீர் குலைகளால் அலங்கரிக்கப்படும்,  பல்வேறு  வண்ண ரோஜாக்கள், சாமந்தி பூ தோரணம்,  பன்னீர் கரும்பு தோரணம் என, இரண்டாம் பிரகாரம் அலங்கரிக்கப்பட்டு, கண்கொள்ளா காட்சியாக உள்ளன. கோவில் கொடிமர நுழைவாயிலில், இரண்டு நந்தியம்பெருமானுக்கு நடுவில் சிவலிங்கம் உள்ளது போல், வண்ண மலர் தோரணங்கள் கட்டப்பட்டு, அதன்மேல் மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ள காட்சி, காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது. நாளை மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவையொட்டி சுவாமி சன்னதி முழுவதும், பல்வேறு வண்ண ரோஜா, சாமந்தி பூக்களால்  தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கோவில் வளாகம் முழுவதும், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !