உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்றாம் படை வீடான பழநி திருஆவினன்குடியில் கும்பாபிஷேகம் கோலாகலம்; பக்தர்கள் குவிந்தனர்

மூன்றாம் படை வீடான பழநி திருஆவினன்குடியில் கும்பாபிஷேகம் கோலாகலம்; பக்தர்கள் குவிந்தனர்

பழநி, திருஆவினன்குடி, குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் அரோகரா கோஷத்துடன் நடந்தது. 


பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டின் கீழ் முருகனின் மூன்றாம் படை வீடான அடிவாரத்தில் குழந்தை வேலாயுதசுவாமி எழுந்தருளியுள்ள திருஆவினன்குடி கோயிலில் சொக்கலிங்கேஸ்வரர், மீனாட்சி சன்னதி, அண்ணாமலையார், உண்ணாமலை நாயகி சன்னதி, சனீஸ்வர சன்னதி, விநாயகர், நக்கீரர், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, அருணகிரிநாதர், உள்ளிட்டவை வெளிப்பிரகாரத்தில், குழந்தை வேலாயுத சுவாமி சன்னதி, பிரம்மா, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, பசுபதீஸ்வரர், மீனாட்சி, அம்மன், சுந்தரேஸ்வரர், பைரவர் வீரபாகு, தட்சிணாமூர்த்தி, லட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி, வீரபாகு, சண்டியேஸ்வரர் ஆகிய சுவாமிகள் உட்பிரகாரத்திலும் உள்ளன.


இக்கோயிலில் கும்பாபிஷேகம் கடந்த 2014,செப்.,7 ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதன்படி இந்த கும்பாபிஷேகத்திற்காக ஜூன் 16 அன்று பாலாலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நவ.5.,ல் முகூர்த்த கால் நடுதல், டிச.1 ல் கோயிலின் 19 விமான கலசங்கள் பொருத்தப்பட்டன. டிச.,4ல் கணபதி பூஜை நடந்து கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. டிச.,5., ல் அலங்கரிக்கப்பட்ட திருக்குடங்கள் யாக சாலையில் எழுந்தருள செய்தல் சூரிய பூஜை, சூரிய ஒளிக்கதிரில் இருந்து நெருப்பு எடுத்தல், திருமஞ்சனம் கொண்டு வருதல், நெல்லிமர வழிபாடு நடைபெற்று முதற்கால வேள்வி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் யாகசாலையில் கும்பாபிஷேக கேள்விகள் நடைபெற்றன.


இன்று (டிச.,8) அதிகாலை 4:00 மணிக்கு ஆறாம் கால வேள்வி துவங்கி நடைபெற்றது. காலை 6:26 மணிக்கு மூலவர் சன்னதி, திருச்சுற்றில் உள்ள சன்னதி, ராஜகோபுரம், மண்டப வாயில் கோபுரம் உள்ளிட்ட அனைத்து விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் பக்தர்கள் "அரோகரா" கோஷம் முழங்க நடைபெற்றது. சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஹிந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி, பழநி எம்.எல். ஏ., செந்தில்குமார், இந்து சமய அறநிலைத்துறை கமிஷனர் ஸ்ரீதர், திண்டுக்கல் கலெக்டர் சரவணன், எஸ்.பி.,பிரதீப், கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் இணை கமிஷனர் மாரிமுத்து. அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


கும்பாபிஷேக துளிகள்:


* பக்தர்கள் குளத்து ரோடு, சன்னதி வீதி பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு கும்பாபிஷேகம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

* நகரின் முக்கிய நபர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு சன்னதிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

* கும்பாபிஷேகம் நடைபெற்ற போது மூலவர் சன்னதி விமான கலசம், ராஜகோபர கலசம் ஆகியவற்றிற்கு ட்ரோன் மூலம் பூக்கள் தூவப்பட்டது.

* திருஆவினன்குடி கோயிலில் மூவாயிரம் கிலோ பூக்களால் கோயில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

* புதியதாக அமைக்கப்பட்ட பார்க்கிங் பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

* வாகனங்கள் கோயில் வரை அனுமதிக்கப்படாததால் பஸ் ஸ்டாண்ட் பகுதியிலேயே பக்தர்கள் டூவீலர்களை நிறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !