தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் பஜனை விழா, ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
மானாமதுரை; மானாமதுரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற பஜனை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அமைந்துள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் முதல் தேதியன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். இதனைத் தொடர்ந்து வாரம்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கோயிலில் இரவு நடைபெறும் பஜனைகளில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்ப சுவாமி பாடல்களை ஒன்றாக சேர்ந்து பாடி பஜனை செய்து வருகின்றனர். இன்று புதன்கிழமை நடைபெற்ற பஜனையில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி பாடல்களை மேள தாளங்களுடன் பாடினர். அப்போது கருப்பசாமி பாடல்களை பாடிய போது ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கருப்பசாமி அருள் வந்து ஆடினர். முடிவில் ஐயப்ப சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் அன்னதானமும் நடந்தது. பஜனைக்கான ஏற்பாடுகளை ஐயப்ப குருசாமிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.