திருப்பதியில் இஸ்ரோ தலைவர் இந்தியா செலுத்தும் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றி பெற வழிபாடு
திருப்பதி; டிசம்பர் 24ம் தேதி காலை 8.54 மணிக்கு அமெரிக்க செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்த திட்டம் வெற்றி பெற, இஸ்ரோ தலைவர் நாராயணன், திருப்பதியில் வழிபாடு நடத்தினார்.
அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக, 6,500 கிலோ எடையில், புளூபேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது; இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை, நம் நாட்டின், இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், விண்ணில் செலுத்த உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, வரும், டிசம்பர் 24ம் தேதி காலை, 8:54 மணிக்கு, எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, புளூபேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. நாளை காலை கவுன்டவுன் தொடங்குகிறது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 22) இந்த திட்டம் வெற்றி பெற, இஸ்ரோ தலைவர் நாராயணன் திருப்பதியில் வழிபாடு நடத்தினார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு பிரசாரதம் வழங்கினர். பின்னர் நிருபர்களிடம் இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்படும் அமெரிக்க செயற்கை கோள், ககன்யான், சந்திரயான் - 4 திட்டங்கள் குறித்து விளக்கினார். அவர் 2027ல் சந்திரயான் - 4 திட்டம் முழுமை பெறும் என்று உறுதி அளித்துள்ளார். - நமது நிருபர்-