உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழாவில் ஜன., 2ல் மரகத நடராஜருக்கு சந்தனம் படி களைதல் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 6:30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா பிரசித்தி பெற்ற விழாவாகும். மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற சிவஸ்தலமான உத்தரகோசமங்கையில் மங்களநாதர் சுவாமி கோயில் உள்ளது. கோயிலின் வடக்கு பகுதியில் அபூர்வ பச்சை மரகதாரா மரகத நடராஜர் தனி சன்னதி உள்ளது. ஒளி, ஒலியால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனத்தால் காப்பிடப்பட்டு நடராஜ பெருமான் இருப்பார். ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனம் களையப்படும். இதனை முன்னிட்டு நேற்று மங்கள விநாயகர் கோயிலில் அனுக்ஞை மற்றும் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மாணிக்கவாசகப் பெருமான், பஞ்சமூர்த்திகள் மற்றும் மரகத நடராஜ பெருமான் ஆகியோருக்கு காப்பு கட்டப்பட்டது.
வருகிற ஜன., 2 காலை 8:30 மணிக்கு நடராஜருக்கு சந்தனம் படி களைதல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று முழுவதும் தொடர்ந்து 32 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்கின்றன. அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள் மீண்டும் அபிஷேகம் தீபாராதனைகளுக்கு பின் திரையிடப்பட்டு புதியதாக மரகத நடராஜரின் திருமேனியில் சந்தனம் காப்பிடப்படும். இந்த அரிய விசேஷ தரிசனத்தை காண்பதற்காக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். மார்கழி ஆருத்ரா தரிசன விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.