கும்பம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026
அவிட்டம்: நிதானம் அவசியம்
சகோதர, தைரிய, வீரிய, பராக்கிரமக் காரகனான செவ்வாய் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், 1,2 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கும், 3,4 ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கும் ஆயுள்காரகனான சனியே ராசி நாதனாவார்.
2026ல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரைச்சனி விலகுவதால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எடுக்கும் வேலைகளில் வெற்றியுண்டாகும். ஆதாயம் கூடும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம ராசியை விட்டு சனி விலகுவதும், குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். செல்வாக்கை உயர்த்தும்.
சனி சஞ்சாரம்
அவிட்டம் 1,2 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 முதல் முயற்சி, சகாய ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கப்பதால் இதுவரை அனுபவித்து வந்த சங்கடங்களும் நெருக்கடிகளும் இனி இல்லாமல் போகும். தொழில், வேலை, குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 3,4 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 முதல் ராசியை விட்டு சனி விலகுவது பெரும் நன்மையாகும். பாத சனியாக சஞ்சரித்து வருமானத்தை அதிகரிப்பார். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். வேலைகளில் ஏற்பட்ட மந்தநிலை நீங்கும்.
ராகு, கேது சஞ்சாரம்
நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து நவ.13 முதல் மகரத்திற்கு ராகுவும், கடகத்திற்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதால் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வேலையில் தடை, எதிர்பார்ப்பில் இழுபறி, கொடுக்கல் வாங்கலில் பிரச்னை, ஆரோக்யத்தில் பின்னடைவு, சிலருக்கு அவமானம் ஏற்படும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.12 வரை அவசரப்பட்டு தேவையில்லாதவற்றில் முதலீடு செய்வதும், போட்ட பணத்தை எடுக்க முடியாமல் போராட வேண்டிய நிலையும், தவறான நண்பர்களால் சங்கடத்திற்கு ஆளாகும் நிலையும் ஏற்படும். நவ. 13 முதல் இந்த நிலை மாறும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். வழக்கு வெற்றியாகும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும்.
குரு சஞ்சாரம்
மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக். 20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால், 1,2 ம் பாதத்தினருக்கு மே 25 வரை குருவின் பார்வைகளால் வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். மே26 முதல் சப்தம குருவால் செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அக். 20 முதல் குருவின் பார்வைகளால் விரயச் செலவுகள் குறையும், பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு மே 25 வரை பஞ்சம குருவால் பட்டம், பதவி, செல்வாக்கு, அந்தஸ்து, சொத்து, சுகம் என அனைத்திலும் மகிழ்ச்சி உண்டாகும். மே26 முதல் குருவின் பார்வைகளால் வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அக். 20 முதல் சப்தம குருவால் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடந்தேறும். பெரிய மனிதர்கள் ஆதரவால் விருப்பம் நிறைவேறும்.
சூரிய சஞ்சாரம்
அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 15 – ஏப். 13, ஜூன். 15 – ஜூலை 16 காலங்களிலும், அக்.18 – டிச.15 காலத்திலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன.1 – 14 மற்றும் ஏப். 14 – மே14 காலங்களிலும், ஜூலை 17 – ஆக.17, நவ. 17 – டிச. 31 காலத்திலும் சூரியனின் சஞ்சார நிலைகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரம், தொழிலில் ஆதாயம் உண்டாகும். பணியில் உயர்வை வழங்கும். அரசுவழி முயற்சி வெற்றி பெறும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். வாய்ப்பு தேடிவரும்.
பொதுப்பலன்
எல்லாவற்றையும் எதிர்கொண்டு வாழத் தெரிந்த உங்களுக்கு 2026 நன்மையான ஆண்டாக இருக்கும். வரவு அதிகரிக்கும். கடன் விலகும். உடல்நிலை சீராகும். எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய தொழில் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
தொழில்
தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விவசாயம், ரியல் எஸ்டேட், மெடிக்கல், கெமிக்கல், உணவகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, உதிரி பாகங்கள் தயாரிப்பு, விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், வாகன விற்பனை, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் முன்னேற்றமடையும்.
பணியாளர்கள்
வேலையில் இருந்த நெருக்கடி விலகும். கடுமையாக உழைத்தும் அதற்கேற்ற ஊதியம் இல்லை, அங்கீகாரம் இல்லை என வருந்தும் நிலை மாறும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணியாளர்களின் நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். தடைபட்டு வந்த இடமாற்றம், பதவி உயர்வு இந்த ஆண்டில் கிடைக்கும்.
பெண்கள்
வாழ்க்கை போராட்டமாக இருக்கிறதே; நமக்கு விடிவே வராதா என ஏங்கியவர்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், செல்வம், செல்வாக்கு என அவரவர் நிலைக்கேற்ப கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எலியும், பூனையுமாக இருந்த தம்பதியர் உடலும் உயிருமாக மாறுவர். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளியூரில் வேலை பார்ப்பவர்களுக்கு சொந்த ஊருக்கு மாறுதல் கிடைக்கும்.
கல்வி
படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வு வரையில் உங்கள் கவனத்தை வேறு எங்கும் செலுத்தாமல் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது அவசியம்.
உடல்நிலை
பரம்பரை நோய், தொற்று நோய் என அவதிப்பட்டவர்களுக்கு உடல் பாதிப்பு விலக ஆரம்பிக்கும். உடல் நலத்துடன் நடை போடுவீர்கள் என்றாலும் சனியின் பார்வையும் கேதுவும் உங்களுக்கு எந்த நேரத்திலும் சங்கடத்தை உண்டாக்கலாம் என்பதால் வாகனப்பயணத்தில் அதிகபட்ச நிதானமும் கவனமும் தேவை.
குடும்பம்
குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். வேலையின் காரணமாக பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வதுடன் கவுரவமாக வாழ வேண்டும் என்ற முடிவிற்கு வருவர். புதிய இடம், வீடு, வாகனம், ஆடை ஆபரணம் என வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபிட்ச நிலை இருக்கும்.
பரிகாரம் : வடபழநி முருகனை வழிபட்டால் வாழ்வில் வளம் சேரும்.
சதயம்: உழைப்பு உயர்வு தரும்
கர்மக்காரகனான சனி, யோகக்காரகனான ராகு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026ம் ஆண்டு உழைப்பால் உயர்வு பெறக் கூடிய ஆண்டாகும். எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். கடந்த ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடி, பிரச்னை விலகும். செல்வாக்கு உயரும். நீண்டநாள் கனவு நனவாகும். பணவரவு அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும்.
சனி சஞ்சாரம்
மார்ச் 6 முதல் ஜென்ம ராசியை விட்டு சனி விலகுவதால் கடந்த ஐந்தாண்டாக சந்தித்த போராட்டம், மன உளைச்சல், விரயம், முயற்சியில் ஏற்பட்ட தடை என்ற நிலையெல்லாம் இனி மாறும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திடீர் வாய்ப்பு தேடி வரும். அஸ்தமனம், வக்கிரம், குருப்பார்வை என்ற நிலைகளால் சனியின் பாதிப்பு இந்த ஆண்டில் உங்களை நெருங்காது.
ராகு, கேது சஞ்சாரம்
நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கின்றன. நவ. 13 முதல் மகரத்திற்கு ராகுவும் கடகத்திற்கு கேதுவும் பெயர்ச்சியாவதால், நவ.12 வரை உங்கள் சக்தியையும் மீறி ஆசை கொள்வீர்கள். அதிக வருமானத்திற்கு ஆசைபட்டு, அவசரப்பட்டு தவறான நபர்களின் வழிகாட்டுதலால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வீண் முதலீடு செய்து பணத்தை எடுக்க முடியாமலும் போராடுவீர்கள். நவ.13 முதல் இந்த நிலை மாறும். உங்களால் நம்ப முடியாத அளவிற்கு ஆறாமிட ராகு அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பார். எடுக்கும் முயற்சியை எல்லாம் லாபமாக்குவார். எதிர்ப்பு, வழக்கு, நோய், கடன் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும்.
குரு சஞ்சாரம்
மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார். தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால், மே 25 வரை 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் வேலைவாய்ப்பு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு, உயர்கல்வி, வாகனம் என விருப்பம் அனைத்தும் நிறைவேறும். மே 26 முதல் குருவின் பார்வையால் வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதியும், பணப்புழக்கமும் இருக்கும். அக்.20 முதல் 7ம் இட குருவால் வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். விருப்பம் பூர்த்தியாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.
சூரிய சஞ்சாரம்
ஜன. 1 – 14, மற்றும் ஏப். 14 – மே 14 காலங்களிலும், ஜூலை 17 – ஆக. 17, நவ. 17 – டிச. 31 காலத்திலும் சூரியனின் 3,6,10,11 சஞ்சார நிலைகளால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம், தொழில் லாபம் தரும். பணியில் உயர்வு கிடைக்கும். அரசுவழி வேலைகள் சாதகமாக அமையும்.
பொதுப்பலன்
தொழில், வேலை, குடும்பம், பொது வாழ்க்கை என எல்லாவற்றிலும் கடும் நெருக்கடியை சந்தித்த நிலையில், 2026 ம் ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். குருவின் 5, 7 ம் இட சஞ்சாரம், பார்வைகள், ராசியை விட்டு சனி விலகுவது என்ற நிலையால் உங்கள் வாழ்வு வளமாகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.
தொழில்
மீன சனியின் பார்வை லாப ஸ்தானத்திற்கு கிடைப்பதால் தொழில் முன்னேற்றமடையும். முதலீடு செய்த பணத்தையும் எடுக்க முடியவில்லை, லாபத்தையும் பார்க்க முடியவில்லை என்று சங்கடப்பட்ட நிலை மாறும். வருமானம் அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி, நிதி நிறுவனம், சினிமா, தொலைக்காட்சி, மெடிக்கல், கெமிக்கல், ரசாயனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, உதிரி பாகம் தயாரிப்பு, வாகன விற்பனை, ஜூவல்லரி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஆன்லைன் வர்த்தகம், ஆட்டோ மொபைல்ஸ் தொழில்கள் மூலம் லாபம் பெருகும்.
பணியாளர்கள்
வேலை பார்க்கும் இடத்தில் உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற சலுகை கிடைக்கும். நிர்வாகத்தின் ஆதரவு உண்டாகும். வேலை மீதிருந்த பயம் போகும். அரசு பணியாளர்களுக்கு நீண்டநாள் கனவு நனவாகும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வேலையில் இருந்த சிரமம் மறையும்.
பெண்கள்
குடும்பத்தில் நெருக்கடி, கணவருடன் பிரச்னை, வேலை பார்க்கும் இடத்தில் சங்கடம், உடல்பாதிப்பு என்றிருந்த நிலை மாறும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். படிப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் என அவரவர் வயதிற்கேற்ப வாய்ப்புகள் அமையும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
கல்வி
படிப்பில் கூடுதல் கவனம் தேவை. தேர்வு வரை வேறு சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதும், படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவதும் நன்மையாகும். அதனால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
உடல்நிலை
சனியின் பார்வைகள் சுக ஸ்தானத்திற்கும் அஷ்டம ஸ்தானத்திற்கும் கிடைப்பதால் உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பரம்பரை நோய், தொற்று நோய்களால் திடீரென சங்கடம் ஏற்படும். வயிறு, இதயம், மூட்டு வலி, செரிமானக் கோளாறு, மூச்சுத்திணறல், ஒவ்வாமை என மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் உணவு முதல் ஒழுக்கம் வரையில் அனைத்திலும் கவனமாக இருப்பது நன்மை தரும்.
குடும்பம்
குடும்ப நிலையில் ஏற்பட்ட நெருக்கடி, சங்கடம் மறையும். நிம்மதியான நிலை உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பொன், பொருள் சேரும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வெறும் கனவாக இருந்ததெல்லாம் இந்த ஆண்டில் நனவாகும்.
பரிகாரம் : லட்சுமிநரசிம்மரை வழிபட வேண்டுதல் நிறைவேறும். வாழ்வில் வளம் சேரும்.
பூரட்டாதி: வெற்றி நிச்சயம்
தன புத்திரக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2,3 ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசி நாதனாகவும், 4ம் பாதமான மீனத்தில் பிறந்தவர்களுக்கு குருவே ராசிநாதனாகவும் உள்ளனர்.
2026ம் ஆண்டில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவு குறையும். மனதில் நிம்மதி உண்டாகும். உடல்நிலை சீராகும். வழக்குகள் சாதகமாகும். அந்தஸ்து உயரும்.
சனி சஞ்சாரம்
பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 முதல் ஜென்ம சனி விலகுவதால் உடல்நிலை சீராகும். பயந்து செயல்பட்டு வந்த நிலை மாறும். வியாபாரம், தொழிலில் கவனம் அதிகரிக்கும். வருமானம் உயரும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பொருளாதார நெருக்கடி நீங்கும். வீண் செலவு குறையும். தடைபட்டு வந்த வேலைகள் முடிவிற்கு வரும். உடல்நிலையிலும், வாழ்க்கைத்துணையின் நலனிலும், தொழிலிலும் கூடுதல் கவனம் தேவை. அஸ்தமனம், வக்கிரம், குரு பார்வையால் சனியின் பாதிப்பு இந்த ஆண்டில் உங்களை நெருங்காமல் போகும்.
ராகு, கேது சஞ்சாரம்
நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து நவ.13 முதல் மகரத்திற்கு ராகுவும், கடகத்திற்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.12 வரை அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. எந்த ஒன்றிலும் சரியான நிலவரம் தெரிந்து இறங்குவது அவசியம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்பதும், புதிய நட்புகளிடம் கவனமாக இருப்பதும் உங்களுக்கு நன்மையாகும். நவ.13 முதல் ஆறாமிட கேதுவால் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். நோய் நொடி விலகும். செல்வாக்குடன் வாழும் நிலை உண்டாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.12 வரை ஆறாமிட கேது துணிச்சல், செல்வாக்குடன் நடைபோட வைப்பார். எடுத்த வேலைகள் யாவிலும் வெற்றியை ஏற்படுத்துவார். நவ.13 முதல் லாப ராகுவால் பொருளாதார நிலை உயரும். பணவரவு அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும்.
குரு சஞ்சாரம்
மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார். தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக
சஞ்சரிப்பதால், 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 25 வரை தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், வேலை, வீடு, வாகனம், உயர்கல்வி என விருப்பம் அனைத்தும் நிறைவேறும். மே 26 முதல் வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதியும், பணப்புழக்கமும் இருக்கும். அக்.20 முதல் வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். எதிர்பார்ப்பு நிறைவேறும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு, சுயதொழில், வேலை, வீடு, வாசல், அந்தஸ்து, வருமானம், செல்வாக்கு, பணப்புழக்கம் நிம்மதி என்ற நிலை இருக்கும்.
சூரிய சஞ்சாரம்
பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன. 1 – 14, ஏப். 14 – மே. 14 காலங்களிலும், ஜூலை 17 – ஆக. 17, நவ. 17 – டிச. 31 காலத்திலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன.1 – பிப். 12, மே 15 – ஜூன் 14 காலங்களிலும், ஆக. 18 – செப்.17, டிச. 16 – டிச. 31 காலங்களிலும், சூரியனின் சஞ்சார நிலைகளால் உங்களுக்கு இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரம், தொழில், வேலையில் இருந்த தடைகள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அரசில்வாதிகளுக்குசெல்வாக்கு கூடும்.
பொதுப்பலன்
2026 ம் ஆண்டில் உங்களுக்கிருந்த நெருக்கடி விலகி நன்மை அதிகரிக்கும். குருவின் சஞ்சாரம், பார்வைகள் ஆண்டு முழுவதும் சுபிட்ச நிலையை உண்டாக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வாழ்வு வளமாகும். அந்தஸ்து உயரும்.
தொழில்
தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். கடந்த ஆண்டில் தடைபட்ட வேலைகள் இப்போது முடிவிற்கு வரும். ஜூவல்லரி, ஜவுளி, நிதி நிறுவனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் மூலம் லாபம் அதிகரிக்கும்.
பணியாளர்கள்
பணியாளர்களுக்கு தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். விரும்பிய இடமாற்றமும், எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலையில் இருந்த சங்கடங்கள் விலகி நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும்.
பெண்கள்
குருவின் சஞ்சாரம், பார்வை ஆண்டு முழுவதும் சாதகமாக இருப்பதால் கனவு நனவாகும். வாழ்க்கைத்துணையின் அன்பு கூடும். திருமணம், மறுமணம், குழந்தை பாக்கியம், வேலை என்பதுடன், பொன் பொருள் சேர்க்கையும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
கல்வி
படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியம். உயர் கல்வி கனவு நனவாகும். கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும்.
உடல்நிலை
உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். ஆரோக்கியமாக நடை போடும் நிலை உண்டாகும். மருத்துவச்செலவு குறையும்.
குடும்பம்
குடும்பத்தில் இருந்து சங்கடம் முடிவிற்கு வரும். தம்பதிக்குள் இணக்கம் ஏற்படும். நீண்டநாள் கனவு நனவாகும். வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லை விலகும். சொந்த வீடு, வாகனம், பொன் பொருள் சேரும். சுப நிகழ்ச்சி நடக்கும். பிள்ளைகள் உயர் கல்வி பயில்வர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
பரிகாரம் : பகவதி அம்மனை வழிபட சங்கடம் விலகும். வேண்டுதல் நிறைவேறும்.