சிறுவாபுரியில் குவிந்த பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சின்னம்பேடு கிராமத்தில், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசனம் செய்ய வருவர். இன்று செவ்வாய்க்கிழமை என்பதுடன், பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால், அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், சிறுவாபுரி கோவில் அமைந்துள்ள பகுதி முழுதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கோவிலுக்கு வெளியே உள்ள தரிசன வரிசையில், நான்கு மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசித்து சென்றனர். ஹிந்து அறநிலையத் துறையின் திருவள்ளூர் உதவி ஆணையர் சிவஞானம் மேற்பார்வையில், செயல் அலுவலர் மாதவன் தலைமையிலான அத்துறையினர், கோவில் உட்புறத்திலும், ஆரணி போலீசார் கோவிலின் வெளிபுறத்திலும் பக்தர்கள் கூட்டத்தை முறைப்படுத்தினர்.