உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு; கருடசேவை விமரிசை

காஞ்சி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு; கருடசேவை விமரிசை

காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி, சொர்க்கவாசல் திறப்பு, கருடசேவை உத்சவம் விமரிசையாக நடந்தது.

காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே கோவிலான அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கோபூஜையும், தொடர்ந்து, சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், தனுர்மாத பூஜை, நித்யபடி, சாத்துமுறை, சொர்க்கவாசல் துவார பாலகர் துவார பூஜை நடந்தது. காலை 5:30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் சொர்க்க வாசல் வழியாக உத்சவர் ஆதிகேசவ பெருமாள் எழுந்தருளினார். தீப ஆராதனைக்குப்பின், திவ்ய பிரபந்தம் நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் கருங்கற்களால் புதிதாக கட்டப்பட்ட தோட்ட மண்டபத்தில் எழுந்தருளினார்.

காலை 11:00 மணிக்கு திருமஞ்சனமும், மதியம் 2:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவம் நடந்தது. விழா ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் இன்று காலை ரத்தின அங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 1:30 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு மாட வீதி புறப்பாடு நடந்தது. இரவு 7:00 மணிக்கு கோவில் ராஜகோபுரம் அருகில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். சாற்றுமறை நடந்தது.

காஞ்சிபுரம் அடுத்த நாயகன்பேட்டையில் ருக்மணி சத்யபாமா வேணுகோபால சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, இன்று அதிகாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்ட சொர்க்கவாசலில், வேணுகோபாலன் கருடவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில் உள்ள கமலவல்லி சமேத அழகிய மணவாள பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, இன்று காலை 6:00 மணிக்கு உத்சவர் மணவாள பெருமாள் கருடவாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா உலா வந்தார். மூலவர் அழகிய மணவாள பெருமாள், திருப்பதி வெங்கடேச பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !