மலையில் கோத்தர் பழங்குடிகளின் பாரம்பரிய திருவிழா
குன்னுார்: குன்னுார், கேத்தி அருகே, கொல்லிமலை கிராமத்தில், கோத்தர் இன மக்களின் மூர்கம்பட்டராயர் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், கோத்தர் பழங்குடியின மக்கள் கொல்லிமலை, கோத்தகிரி, திருச்சிக்கடி உள்ளிட்ட, 7 கிராமங்களில் வசிக்கின்றனர். அதில், குன்னுார் அருகே உள்ள கொல்லிமலையில் கோத்தரின மக்களின் அய்யனோர், அம்மனோர் எனும் மூர்கம்பட்டராயர் திருவிழா நடந்தது. அதில்,
இங்கு ஆண்டிற்கு ஒரு முறை திறக்கப்படும், குனைனோர் கோவில்களில், விரதம் இருந்த கோத்தரின ஆண்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
வெருகுரி சாஸ்திரம் எனப்படும், விழாவில், தினை, அவரை, உப்பு கொண்டு, ஆண்களால் சமைத்த பொங்கல் கோவிலில் வைத்து, வழிபாடு செய்து, வீடுகளில் உள்ளவர்களுக்கு வழங்கினர். 15 நாட்கள் விரதம் இருந்த மக்கள், ஆடல் பாடல்களுடன் நேற்று கொண்டாடினர். அதில், படுகரின மக்கள் உட்பட மற்ற சமூக மக்களையும், பாரம்பரிய இசைகளுடன் வரவேற்றனர். விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், தானியங்கள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். குலதெய்வத்தை வரவேற்கும் வகையில் பெண்கள் நடனமாடினர்.
அட்டாஸ்; குப்பாஸ் தொடர்ந்து, ஆண், பெண் இருவரும் சமம் என்பதை வலியுறுத்தும், அட்டாஸ் குப்பாஸ் எனப்படும் பாரம்பரிய நடனத்தில், வண்ண உடை மற்றும் அணிகலன்கள் அணிந்த ஆண்கள் நடனமாடினர்.
கோத்தர் பழங்குடியினரின் முதல் டாக்டர் வரதராஜ் கூறுகையில்,‘‘அமாவாசையில், 3ம் பிறை பார்த்து, டிச., அல்லது ஜன., மாதம் பண்டிகை கொண்டாடுகிறோம். கடந்த அமாவாசைக்கு பிறகு முதல் பிறை பார்த்து, கோவிலுக்கு சனியன்று ஆண்கள் மட்டுமே சென்றனர். திங்களன்று, ஆண்கள், பெண்கள் கோவிலுக்கு சென்றனர்,’’ என்றார்.