சூலூர் அருகே காலி இடத்தில் கிடந்த அம்மன் சிலை மீட்பு
ADDED :76 days ago
சூலூர்; சூலூர் அருகே சாலை ஓரம், காலி இடத்தில் கிடந்த, அம்மன் கற்சிலையை வருவாய்த்துறையினர் மீட்டனர்.
சூலூர் அடுத்த பாப்பம்பட்டி கிராமத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளி அருகே உள்ள காலி இடத்தில் அம்மன் சிலை கிடப்பதாக, நேற்று இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்தனர். தாசில்தார் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அங்கு சென்று, மூன்றடி உயரம் உள்ள மாரியம்மன் கற்சிலையை மீட்டனர். பாப்பம்பட்டி கிராம நிர்வாக அலுவலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதுகுறித்து தாசில்தார் கூறுகையில்," மூன்று அடி உயரம் உள்ள அம்மன் சிலை மீட்கப்பட்டுள்ளது. சிலை குறித்து அறநிலையத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்ததும் அம்மன் சிலை அவர்களிடம் ஒப்படைக்கப்படும்," என்றார்.