உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி வைபவம்

மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி வைபவம்

திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி வைபவம் நடந்தது.


புண்ணிய நதியாக விளங்கும் தென்பெண்ணையில் தைத்திங்கள் முதல் நாளிலிருந்து ஐந்து தினங்களுக்கு அனைத்து நதிகளும் தத்தம் தீவினையை போக்கிக் கொள்ள பெண்ணையாற்றில் சேர்கிறது என்பது ஐதீகம். அதன்படி சிறப்பு வாய்ந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை, தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையார் ஆண்டு தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். இதன்படி நேற்று திருவண்ணாமலையிலிருந்து அண்ணாமலையார் புறப்பட்டு இன்று மதியம் 12.30 மணிக்கு மணலூர்பேட்டையை வந்தடைந்தார். ஆஞ்சநேயர் கோவில் அருகே மணலூர்பேட்டை மாவடி விநாயகர், பிரயோக வரதராஜ பெருமாள், அகஸ்தீஸ்வரர், கெங்கையம்மன், மாரியம்மன், சித்தப்பட்டினம் லட்சுமி நாராயண பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள் அண்ணாமலையாரை மேளதாளம் முழங்க வரவேற்று தென்பெண்ணை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். தென்பெண்ணையில் தீர்த்தவாரி முடிந்து, சிறப்பு பந்தலில் சுவாமி எழுந்தருளி, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க அண்ணாமலையாருக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது. திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்து சமய அறநிலைத்துறை மற்றும் மணலூர்பேட்டை பொதுமக்கள் இணைந்து விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !