திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் தெப்போத்சவம் நிறைவு
காஞ்சிபுரம்: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் இரவு தெப்போத்சவம் வெகுவிமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், மரகதவல்லி சமேத விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தை தொடர்ந்து, மூன்று தினங்கள் தெப்போத்சவ விழா நடைபெறும். இந்த மூன்று தினங்களும், ஜடாயு தீர்த்த குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் மரகதவல்லி சமதே விஜயராகவப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நடப்பாண்டு தெப்போத்சவ விழா, நேற்று முன்தினம் இரவு துவங்கியது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பல் மூன்று முறை வலம் வந்தது. நேற்று இரண்டாவது தின தெப்போத்சவம் நடந்தது. இன்று நிறைவு நாள் தெப்போத்சவம் நடைபெற உள்ளது. இன்று, ஏழு சுற்றுகள் வலம் வர உள்ளது.