உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தருமை ஆதீனம் பல்நோக்கு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா

தருமை ஆதீனம் பல்நோக்கு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் வனதுர்க்கை கோயில் எதிரே தருமபுரம் ஆதீனம் மற்றும் கர்நாடகா பிரசாந்தி பால மந்திர் டிரஸ்ட் சார்பில் சாய் ஆரோக்கியா தருமை ஆதீனம்  பல்நோக்கு மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.


தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் சத்திய சாய் மனித வள சிறப்பு பல்கலைக்கழக வேந்தர் சத்குரு மதுசூதன் சாய் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் அருளாசி வழங்கினார் .


சத்குரு மதுசூதன் சாய் அருளாசி வழங்கி பேசுகையில் ஒரே உலகம் ஒரே குடும்பம் என்ற கோட்பாட்டை பின்பற்றி வருகிறோம். தருமபுமை ஆதீனம் மற்றும் கல்வி நிறுவனங்கள் மக்கள் சேவை மகேசன் சேவை என்று செய்து வருகிறார்கள். எனது குரு சத்யசாய் பாபா உணவு, மருத்துவம், கல்வி ஆகியவற்றை மக்களுக்கு இலவசமாக கொடுக்க சொல்வார். பணம் இல்லை என்ற காரணத்தால் மருத்துவம் பார்க்காமல் யாரும் பாதிக்கக்கூடாது என்று எனது குருசொல்வார். எங்கெல்லாம் தன்னற்ற சேவை இருக்கிறதோ அங்கு கடவுள் அருளாட்சி இருக்கும். மூன்றாவது முறையாக மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்து ஆதீனத்தின் சேவைகளை பார்த்துள்ளேன். 27வது குருமகா சந்நிதானத்தின் மணிவிழாவிற்கு வந்தபோது சன்னிதானத்திற்கு தன்னால் என்ன கொடுக்க முடியும் என்று நினைத்தேன். குருமகா சந்நிதானத்தின் நினைவில் இருந்த மருத்துவசேவை செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்ததை அடுத்து 60 படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவமனை கட்டிகொடுப்பதாக வாக்குறுதி அளித்தேன். காலதாமதம் இன்றி அதற்கான இடத்தினை தருமை ஆதீனம் தேர்வு செய்ததால் தற்போது பூமிபூஜை செய்துள்ளோம். இங்கு மருத்துவமனை கட்டிமுடிக்க இன்னும் 9 மாதங்கள் தான் உள்ளது. 9வது மாதம்  மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் அதற்கான கட்டுமான பணிகளை செய்யக்கூடிய அனைவரும் இங்கு வந்துள்ளார்கள் அதனை அவர்கள் நிகழ்த்தி காட்டுவார்கள். இதுபோன்ற நல்லவிஷயத்தை மக்கள் ஆதரிக்க தொடங்கியுள்ளனர். ஆதீனம் கொடுத்த செங்கோலை எனது கரத்தில் ஏந்தி அனைத்தையும் செய்துமுடிப்பேன். எந்த தடங்கள் வந்தாலும் குருமகா சந்நிதானத்தில் அருளாசியினால் மருத்துவமனை வரும். வரும் நவம்பர் 6ம் தேதி இங்கு வருவேன் அது இந்த  மருத்துவமனையின் திறப்பு விழாவாகத்தான் இருக்கும். நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். மல்டிபேஷாலிட்டி மருத்துவமனை 1 ரூபாய் செலவு இன்றி அனைத்து மருத்துவ சேவையும் இலவசமாக வழங்கப்படும். தாய்சேய் நலனுக்கான டாக்டர்கள், உபகரணங்கள், மல்டி சூப்பர்பேஷாலிட்டி மருத்துவமனைக்கு தேவையான அனைத்து மருத்துவ சேவைகளும் கிடைக்கும் என்றார். 


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்தி சிறப்புரை ஆற்றினார். தனியார் பவுன்டேஷன் சார்பில் வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் நிதியை தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம், மதுசூதன் சாயிடம் வழங்கினார். செயலாளர் வெற்றிவேல் வரவேற்றார். கர்நாடகா சாயிகுரு நன்றி கூறினார்.  எம்.எல்.ஏ.ராஜ்குமார், நகராட்சி தலைவர் செல்வராஜ், ஆதீனம் கல்லூரி செயலாளர் செல்வநாயகம், முதல்வர் சாமிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  முன்னதாக கர்நாடகாவில் இருந்து மன்னம்பந்தல் தனியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த மதுசூதன் சாய்க்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !