பழநி தைப்பூச விழாவில் தெப்பத்தேரோட்டம்
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயில் நடந்த தைப்பூச திருவிழாவில் நடந்த தெப்பத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன.26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆறாம் நாள் விழாவான ஜன. 31 மாலை பெரிய நாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம், அன்று இரவு வெள்ளி தேரோட்டம், பிப்.1 ல் தைப்பூச திருத்தேரோட்டம் நடந்த நிலையில் நேற்று (பிப். 4 ) காலை பெரிய நாயகி அம்மன் கோயிலில் உள்ள தெய்வானை சன்னதி சென்றபின் கோயில் நடை அடைக்கப் பட்டது.
அதன்பின் ஓதுவார் சிவ நாகராஜன் பாடல்கள் பாட திருஊடல் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். இதன் பின் கோயில் நடை திறக்க வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.
விழாவின் இறுதி நிகழ்ச்சியாக நேற்று இரவு கோயில் தெப்பக்குளத்தில் தெப்பத் தேரோட்டம் நடந்தது.
குளத்தை தெப்பம் மூன்று முறை சுற்றி வர அதில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினர். தொடர்ந்து இரவு கொடி இறக்குதலுடன் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.