உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம் : மாசி ராசி பலன்

துலாம் : மாசி ராசி பலன்

சித்திரை 3, 4 ம் பாதம்

உழைப்பால் உயரும் உங்களுக்கு, தனாதிபதியும் சப்தமாதிபதியுமான செவ்வாய் பிப்.21 வரை சுகஸ்தானத்திலும், அதன் பின் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வேலைப்பளு கூடும். அலைச்சல் அதிகரிக்கும். எடுக்கும் வேலைகளில் நெருக்கடி தோன்றும். பிள்ளைகளின் வழியே சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உறவுகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி ஏற்படும். பூர்வீக சொத்து விவகாரத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திக்க நேரும் என்றாலும், மார்ச் 6 முதல் சனி பகவான் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் புதிய பாதை தெரியும். இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்கள் உங்கள் பாதையில் இருந்து விலகுவர். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். விருப்பம் பூர்த்தியாகும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வித்யாகாரகன் புதன் பிப்.20 முதல் வக்கிரமடைவதால் மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக படிப்பது அவசியம். இடம், வீடு வாங்குபவர்கள் மூலப்பத்திரத்தை நன்கு ஆய்வு செய்யவும். தம்பதியர் ஒருவருவருக்கொருவர் ஆலோசித்து செயல்படுவது நலம் தரும். 

சந்திராஷ்டமம்: பிப்.23, 24

அதிர்ஷ்ட நாள்: பிப்.15, 18, 27. மார்ச் 6, 9

பரிகாரம்

திருத்தணி முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்


சுவாதி

எதிலும் முதன்மை பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு,  மாசி நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். யோகக்காரகனான ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்திற்குள்  குழப்பம் இருக்கும். இன்று நடந்து விடும் என எதிர்பார்த்த வேலைகளில் கூட இழுபறி ஏற்படும். மனம் ஒரு நிலையில் இருக்காது. பெரியவர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு தோன்றும். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேதுவால் வாழ்க்கைக்குரிய அடிப்படை வசதி நிறைவேறும். தேவைக்குரிய பணம் வந்து கொண்டிருக்கும். நடக்க வேண்டிய வழக்கமான வேலைகள் நடந்து கொண்டிருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். வேலையில் நெருக்கடி இருந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி இருக்கும். பிப்.21 முதல் செவ்வாயும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.  லாபாதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சங்கடம் ஏற்படலாம்.  ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரிகள் புதிய முதலீட்டை மேற்கொள்ளும் முன் சந்தை நிலவரத்தை கவனிப்பது நல்லது. தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் இழுபறியாகும் அல்லது எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருப்பது நன்மை தரும். பெண்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது அவசியம். 

சந்திராஷ்டமம்: பிப்.24, 25

அதிர்ஷ்ட நாள்: பிப்.15, 22, மார்ச். 4, 6, 13

பரிகாரம்

வெங்கடாஜலபதியை வழிபட சங்கடம் விலகும்.


விசாகம் 1, 2, 3 ம் பாதம்

சூழல் அறிந்து செயல்படும் உங்களுக்கு, மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும் தனகாரகன் குரு பாக்கிய ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். சரியாக திட்டமிட்டு செயல்படும் வேலைகளிலும் இழுபறி ஏற்படும். உங்கள் கவனக்குறைவால் சில வேலைகள் தள்ளிப் போகும். வரவேண்டிய வருமானம் தடைபடும். பணியாளர்கள் அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. மேலதிகாரியை அனுசரித்துச் செல்லவும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு  வேலைப்பளுவும் மனதில் ஏதேனும் குறை இருந்து கொண்டே இருக்கும். அதற்காக வேறு வேலைகளைத் தேட முயற்சிக்க வேண்டாம். பணப் பொறுப்பில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வியாபாரிகள  புதிய முதலீடுகளை இந்த மாதத்தில் தள்ளிப்போடுவது நல்லது. வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்பவர்கள் சட்ட ரீதியான விவகாரங்களில் கவனமாக இருப்பது அவசியம். சூரியன், ராகு, செவ்வாயால் நெருக்கடி ஏற்பட்டாலும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும், மார்ச் 6 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், மார்ச் 3 வரை ராசிநாதன் சுக்கிரனும் உங்களைப் பாதுகாப்பர். தேவையான பணம் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை நீடிக்கும். புதிய முதலீடு, இடம் வாங்குவது விற்பது போன்ற விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். யாரையும் நம்பி இந்த நேரத்தில் புதிய வேலையில் ஈடுபட வேண்டாம். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். உறவினராக இருந்தாலும் அவர்களிடம் ஓரடி விலகி இருப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

சந்திராஷ்டமம்: பிப். 25

அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 21, 24. மார்ச். 3, 6, 12

பரிகாரம்

நரசிம்மரை வழிபட விருப்பம் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !