புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான சூறை கோலாகலம்
புட்லுார்: புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று மயான கொள்ளை சூறை திருவிழா கோலாலகமாக நடந்தது.
திருவள்ளூர் அடுத்து புட்லுாரில் அங்காள பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மயான சூறை விழா கோலாகலமாக நடந்து வருகிறது. நடப்பாண்டிற்கான விழா, கடந்த 15ம் தேதி பந்தக்கால் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிரவு பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டினர்.‘ மஹா சிவராத்திரி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மயான சூறை விழா இன்று நடந்தது. மயான சூறை விழாவை முன்னிட்டு நேற்று, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து மயானத்தில் எழுந்தருளினார்.
பின், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், மயானத்தில் கொள்ளையடிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதில், சென்னை, திருவள்ளூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர். திருமழிசை திருமழிசை பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 16ம் ஆண்டு மயானக் கொள்ளை விழா, கடந்த 11ம் தேதி காலை 6:00 மணிக்கு பந்தக்கால் மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை, நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு நடந்தது. அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார். திருத்தணி திருத்தணி பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், மயானச் சூறை பிரம்மோற்சவ விழா, கடந்த 15ம் தேதி இரவு பெரியாண்டவர் விழாவுடன் துவங்கியது. நேற்று முன்தினம் சிவராத்திரி கரகம் ஊர்வலம் நடந்தது. பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான நேற்று மயானச்சூறை விழா நடந்தது. நேற்று மதியம் 1:30 மணிக்கு உற்சவர் அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி, கரக ஊர்வலத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று திருத்தணி நந்தி ஆற்றின் கரையில் எழுந்தருளினார். ஆற்றில் மயானச்சூறை நடந்தது. நாளை முதல் தினமும் இரவு ரிஷபம், நாகம், அன்னம், யானை, குதிரை, புலி, கேடயம் போன்ற வாகனங்களில் உற்சவர் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.