உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் வீதியில் ஓய்வெடுக்கும் பக்தர்கள்; ஓய்வுக்கூடம் ஏற்படுத்த வலியுறுத்தல்

ராமேஸ்வரம் கோயில் வீதியில் ஓய்வெடுக்கும் பக்தர்கள்; ஓய்வுக்கூடம் ஏற்படுத்த வலியுறுத்தல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் இலவச ஓய்வுக்கூடமின்றி பக்தர்கள் சாலையில் அமர்ந்து ஓய்வெடுத்து அவதிப்படும் நிலை உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதன் மூலம் கோயில் உண்டியல் காணிக்கை, புனித நீராடல், தரிசன கட்டணம் என ஆண்டுக்கு ரூ.30 கோடி முதல் ரூ. 35 கோடி ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு வருவாயாக கிடைக்கிறது. ஆனால் பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் நான்கு ரதவீதியில் இலவச ஓய்வுக்கூடம் கூட அமைக்கவில்லை. வடக்கு ரத வீதி தவிர மற்ற 3 ரத வீதியிலும் ஒரு கழிப்பறைக் கூடம் கூட இல்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்தால் கழிப்பறை, ஓய்வுக்கூடம் இல்லாமல் திறந்த வெளியில் இயற்கை உபாதைக்கு செல்வதால் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலும், சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. மேலும் ரதவீதி சாலையில் அமர்ந்து ஓய்வெடுத்து, கொண்டு வந்த உணவை சுகாதாரக் கேட்டுடன் சாப்பிடும் அவல நிலை உள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் இலவச ஓய்வுக்கூடம், கழிப்பறை வசதி கூட ஏற்படுத்தாதது வேதனைக் குரியது. எனவே பக்தர்கள் நலன் கருதி அடிப்படை வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !