திருத்தணி முருகன் கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், திருமண முகூர்த்த நாளான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், இரண்டு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிப்பர். நேற்று, திருமண முகூர்த்த நாள் மற்றும் விடுமுறை நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் திரண்டனர்.
முருகன் மலைக்கோவிலில் 60 திருமணங்கள், தனியார் மண்டபங்களில் 75 திருமணங்கள் என, மொத்தம் 135 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடந்ததால், திருமணத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள், புதிய தம்பதியினர் என, 1,000க்கும் மேற்பட்டோர் மூலவரை தரிசித்தனர்.
இதனால், பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர்.
முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதுதவிர, முருகன் கோவிலில் நடந்து வரும் மாசி மாத பிரம்மோற்சவ விழாவில், நேற்று காலை உற்சவர் முருகன், வள்ளி – தெய்வானையுடன், வெள்ளி சூர்யபிரபை வாகனத்திலும், இரவு 7:00 மணிக்கு பூத வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.