உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரதுர்காவில் தரிசிக்க வேண்டிய மூன்று கோவில்கள்

சித்ரதுர்காவில் தரிசிக்க வேண்டிய மூன்று கோவில்கள்

கர்நாடகாவின் சித்ரதுர்கா கோட்டைகள் நிறைந்த மாவட்டம். வரலாற்று ரீதியாகவும் பெயர் பெற்றது. இம்மாவட்டத்தில் பார்க்க வேண்டிய, மிக முக்கியமான மூன்று கோவில்களை பற்றி பார்க்கலாம். ஹிடிம்பேஸ்வரர் கோவில் இந்த கோவில் மஹாபாரத கதைகளுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இயற்கை குகை போன்ற அமைப்பில் அமைந்துள்ள சிவாலயமாகும். சிவபெருமான் ஹிடிம்பேஸ்வரர் எனும் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.


பக்தர்களுக்கு மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் கோவில் உள்ளது. இங்கு அமைதியான சூழல் நிலவுவதால் தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாகும். மலை ஆஞ்சநேயர் கோவில் சித்ரதுர்கா மலைப்பகுதியில் அமைந்துள்ள, மலை ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். வலிமை, துணிவு, பக்தி போன்றவற்றுக்காக, பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை முன்வைக்கின்றனர்.


ஆஞ்சநேயரின் திருவுருவம், தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. இங்கு சனிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை மனதில் கொண்டு மலை ஏறிச்சென்று தரிசனம் செய்கின்றனர். சந்திரமவுலீஸ்வரர் கோவில் இக்கோவில், சித்ரதுர்கா கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. ஹொய்சாள கட்டட கலையின் வெளிப்பாடாக திகழ்கிறது. துாண்களில் உள்ள சிற்பங்கள் புராண கதைகளை பேசும் வகையில் உள்ளன. காலையிலோ, மாலையிலோ தரிசனம் செய்தால் கோவிலின் அமைதியான ஆன்மிக துளி மனதை நிம்மதியடைய செய்கிறது.  


சொந்த வாகனமே சிறந்தது 


இந்த கட்டுரையில் மூன்று கோவில்கள் குறித்து குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த இடங்கள் அனைத்திற்கும் பொது போக்குவரத்தில் செல்வது கடினமான காரியம். எனவே, ஆன்மிக பயணம் செல்வோர் தங்கள் சொந்த வாகனங்களை எடுத்து செல்லலாம் அல்லது வாடகை வாகனங்களை எடுத்து செல்லலாம். இந்த பயணத்தின் போது இயற்கை சார்ந்த இடங்களையும் பார்க்க முடியும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !