உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகத் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பினர்.


கோவை மாவட்டத்தில் உள்ள, வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில்.


இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத் தேர்த்திருவிழா, வெகு விமர்சையாக நடைபெறும்.


இந்த ஆண்டு தேர்த் திருவிழா நேற்று முன்தினம் இரவு கிராம சாந்தியுடன் துவங்கியது. நேற்று அதிகாலை கோவில் நடை திறந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்பு தேருக்கு முகூர்த்த கால் பூஜை நடந்தது.


ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் முன்பு மகா சங்கல்பம், திருவிழா அழைப்பிதழை அர்ச்சகர் சுரேஷ் நாராயணன் வாசித்தார். பின்பு கால சந்தி பூஜை நடந்தது. யாகசாலை பூஜை முடிந்த பின், கொடியேற்றம் விழா துவங்கியது. கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி, திருக்கோவிலில் வலம் வந்து, கொடிமரம் முன்பு வைக்கப்பட்டது. அங்கு கருடாழ்வாருக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அலங்காரம் முடிந்த பின், மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது.


அதைத் தொடர்ந்து கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியை, காலை, 11:00 மணிக்கு, 40 அடி உயரமுள்ள கொடி மரத்தில் ஏற்றினர். அப்போது கோவில் வளாகத்தில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பினர். நூற்றுக்கணக்கான தாசர்கள் சங்கு ஊதியும், சேகண்டி அடித்தனர். இந்த சத்தம் விண்ணை முட்டும் அளவிற்கு இருந்தது. அப்போது கோவிலின் மேலே வானத்தில் இரண்டு கருடன்கள் வட்டமிட்டு கொண்டிருந்தன. இதை பார்த்த பக்தர்கள் கைகூப்பி வணங்கினர்.


இன்று இரவு சிம்ம வாகனத்திலும், 26ம் தேதி அனுமந்த வாகனத்திலும், 27ம் தேதி கருட வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. மார்ச் 1ம் தேதி காலை 5:30 மணிக்கு கோவிலில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறும்.


2ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருள உள்ளார். அன்று மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது.


கொடியேற்றம் விழாவில் கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாச ஸ்ரீதர் பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி, மிராசுதாரர்கள், கோவிந்தன், செயல் அலுவலர் முத்துசாமி உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !