ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினம்; போன் பயர் ஏற்றி தியானம்
வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால், 1968ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியன்று, ஆரோவில் நகரம் உருவாக்கப்பட்டது. அதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஆரோவில் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.ஆரோவில் நகரம் உருவான 58வது ஆண்டு விழாவையொட்டி, அதிகாலை 5:15 மணியளவில் ஆரோவில் மாத்ரி மந்திர் எதிரில் உள்ள ஆம்பி தியேட்டரில் போன் பயருடன் கூட்டு தியான (தீ மூட்டப்பட்டு சுற்றி அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவது) நிகழ்ச்சி நடந்தது.கூட்டு தியானத்தின் போது, ஆரோவில் சாசனம் அன்னையின் குரலால் ஒலிபரப்பப்பட்டது.தீப்பிழம்பின் பின்னணியில் மாத்ரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது அனைவரையும் பரவசப்படுத்தியது.இதில் வெளிநாடு, உள்நாடு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் ஏராளமானோர் பங்கேற்று கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.