மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தமிழக கவர்னர் விஸ்வநாத் அர்லேகர் தரிசனம்
சென்னை: தமிழகத்தின் 27வது கவர்னராக, ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று பதவியேற்றார். பதவியேற்ற பின் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழக கவர்னராக இருந்த ரவி, மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து, கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கி, ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். தமிழகத்தின் புதிய கவர்னர் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. தமிழகத்தின் 27வது கவர்னராக, ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர்களை, கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, உயர் நீதிமன்ற நீதிபதிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவில், புதிய கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் மனைவி அனேகா அர்லேகர், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக அமைச்சர்கள் வேலு, நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேகர்பாபு, மேயர் பிரியா, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் கவர்னர் தமிழிசை மற்றும் பல்கலை துணைவேந்தர்கள், தொழிலதிபர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், வாஸ்கோடகாமாவில் உள்ள எம்.இ.எஸ்., கல்லுாரியில் வணிகவியலில் பட்டம் பெற்றார். அதன்பின், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இணைந்து பணியாற்றினார். கடந்த 1989ம் ஆண்டு, பா.ஜ.,வில் இணைந்தார். கோவா மாநிலத்தின் பா.ஜ., தலைவராகவும், எம்.எல்.ஏ.,வாகவும், சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார். அம்மாநிலத்தின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். கடந்த 2021 – 23ம் ஆண்டுகளில், ஹிமாச்சல பிரதேச கவர்னராகவும், 2023 – 24ம் ஆண்டுகளில், பீஹார் கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2024 ஜன., 2ம் தேதி, கேரள மாநிலத்தின் 23வது கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றுக் கொண்டார். தற்போது, தமிழக பொறுப்பு கவர்னராக பதவியேற்றுள்ளார்.
பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல் தமிழக கவர்னர் பதவியேற்பு விழா நிறைவில், மத்திய அரசின் புதிய உத்தரவின் அடிப்படையில், வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவரும், வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்றனர்.
சுவாமி தரிசனம்; பதவியேற்ற பின் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வந்த கவர்னர் விஸ்வநாத் அர்லேகர் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.