மானாமதுரை ஆதி முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் விழா
மானாமதுரை; மானாமதுரை ஆதி முத்து மாரியம்மன் கோயில் பூக்குழி இறங்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதல்களை நிறைவேற்றி கொண்டனர்.
மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள ஆதி முத்துமாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் பூக்குழி இறங்கும் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினம் தோறும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழாவிற்காக ஏராளமான பக்தர்கள் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரே உள்ள வைகை ஆற்றிற்கு சென்று அங்கு பால்குடங்கள், காவடிகள் எடுத்து தீச்சட்டிகள் ஏந்தி, அலகு குத்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து கோயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி இருளாயி அம்மாள், பூசாரி மூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.