உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அப்பா பைத்தியசாமி கோவிலில் முதல்வர் ரங்கசாமி சிறப்பு பூஜை

அப்பா பைத்தியசாமி கோவிலில் முதல்வர் ரங்கசாமி சிறப்பு பூஜை

புதுச்சேரி: சட்டசபை தேர்தலில் கூட்டணியில் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படாத இழுபறி நிலையில், எவ்வித பதற்றமின்றி முதல்வர் ரங்கசாமி வழக்கம்போல் அமாவாசையை முன்னிட்டு அப்பா பைத்தியசாமி கோவிலில் பூஜை செய்து அன்னதானம் வழங்கினார்.


புதுச்சேரியில், சட்டசபை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அரசியல் கட்சிகளுக்குள் கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், தே.ஜ., கூட்டணியில் என்.ஆர். காங்., – பா.ஜ., இடையே தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், கூட்டணியில் புதிதாக லட்சிய ஜனநாயக கட்சியை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து, என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதையடுத்து, பா.ஜ., நிர்வாகிகள் தலைமையிடம் முதல்வரின் கோரிக்கையை தெரிவிக்க டில்லியில் முகாமிட்டுள்ளனர். இதுபோன்று கூட்டணியில் பல்வேறுபிரச்னைகள் நிலவி வந்தாலும், முதல்வர் ரங்கசாமி எவ்வித பதட்டமின்றி, வீட்டில் இருந்தார். இதனால்,தொகுதியில் பிரசாரம் செய்யலாமா, வேண்டாமா என்ற குழப்பமான நிலையில், அக்கட்சி சீட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் கூட முதல்வர் வீட்டிலேயே முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை 11:45 மணிக்கு முதல்வர் ரங்கசாமி, வீட்டின் அருகே உள்ள தனது குருவான அப்பா பைத்திய சாமி கோவிலுக்கு சென்று, அமாவாசை சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில், அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு., எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ், பாஸ்கரன், என்.ஆர்.காங்., பிரமுகர்கள் நாராயணசாமி கேசவன், ரவி பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர். பின், மாலை 4:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சேலம் அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !