காரமடை அரங்கநாதர் கோவில் மண்டபத்தில் விரிசல்
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், கல்யாண மண்டபத்தின் மேல் தளம் இடிந்துள்ளது. இதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் சனிக்கிழமை நாட்களில், 1000க்கும் மேற்பட்ட பக்தர்களும் வந்து செல்கின்றனர். கோவிலில் மாசி மகத் தேர் திருவிழா, வைகுண்ட ஏகாதசி விழா, புரட்டாசி சனிக்கிழமை ஆகிய விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
தேர்த்திருவிழாவில் லட்சம் பக்தர்களுக்கு மேல் பங்கேற்பர். புரட்டாசி மாதம், 5 சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, கோவிலில் உள்ள, தாசர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை வழங்கி அரங்கநாதர் பெருமாளை வழிபட்டு செல்வது வழக்கம். வைகுண்ட ஏகாதேசி அன்றும் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் ஆகின்றன. கோவிலில் திருக்கல்யாண மண்டபத்தின் மேல் தளத்தில் மூன்று இடங்களில், காரைகள் இடிந்துள்ளன. மழை பெய்தால் உடைப்பின் வழியாக தண்ணீர் சென்றால், மற்ற பகுதிகளிலும் வெடிப்பை ஏற்படுத்தும். வெடிப்பின் உள்ளே தண்ணீர் தேங்கி நிற்கும் பொழுது, கம்பிகள் துருப்பிடிக்க வாய்ப்புள்ளது. இதனால் பெரிய அளவில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கோவில் நிர்வாகம் உடனடியாக, திருக்கல்யாண மண்டபத்தில், இடிந்துள்ள காரைகளை பெயர்த்து எடுத்து விட்டு, புதிதாக தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் முத்துசாமியிடம் கேட்டபோது," கோவில் மேல் தளத்தை பார்த்து, அதன் பிறகு சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.