உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சிவகங்கை, சிவகங்கை அருகே உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. இக்கோயிலில் மார்ச் 23 அன்று இரவு 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா துவங்கியது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டியதும், நேர்த்தி கடன் செலுத்த விரதம் துவக்கிய பக்தர்கள் கையில் காப்புகளை கட்டி கொண்டனர். 


திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு 9:00 மணிக்கு அம்மன் குதிரை, யானை, பூதகி, அன்னம் உட்பட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். விழாவின் 9ம் நாளான இன்று அதிகாலை 5:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியநாயகி அம்மன்  எழுந்தருளினார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று காலை 6:05 மணிக்கு தேரடி தடத்தில் பக்தர்கள் சிதறு தேங்காய் உடைத்து, கிராமத்தார் அனைவரும் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது. தேர் நான்கு ரதவீதிகளை சுற்றி வந்து இன்று காலை 6:35 மணிக்கு நிலையை அடைந்தது. தேர் நிலைக்கு வந்ததும் பக்தர்கள் வாழைப்பழத்தை சூறையிட்டனர். பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் பத்தாம் நாளான நாளை இரவு 7:00 முதல் 10 :00 மணிக்குள் அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழா கமிட்டியினர் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !