பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தெப்பத்திருவிழா
தொண்டாமுத்துார்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், மார்ச் 23ம் தேதி பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில், நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜைகளும், சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. மார்ச் 29ம் தேதி, திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம் நடந்தது. விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று, காலையும், மாலையும் யாகசாலை பூஜையும், திருவீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு 10:00 மணிக்கு, பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் ஆகியோர், மலர் மற்றும் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமான தெப்ப தேரில் எழுந்தருளி, கோவில் தெப்பக்குளத்தில், 11 சுற்று வந்தனர். பின், கோவிலை சுற்றி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.