உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கோவில்களில் பங்குனி உத்திர விழா: மண கோலத்தில் அருள்பாலித்த சுவாமிகள்

காஞ்சிபுரம் கோவில்களில் பங்குனி உத்திர விழா: மண கோலத்தில் அருள்பாலித்த சுவாமிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் பங்குனி உத்திர திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது. 


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர பெருவிழா துவங்கியது. இதில், 10ம் நாள் உத்சவமான நேற்று இரவு ஏலவார்குழலி அம்பிகைக்கும், ஏகாம்பரநாதருக்கும் திருக்கல்யாண உத்சவம் விமரிசையயாக நடந்தது. முன்னதாக நேற்று காலை 10:00 மணிக்கு பெரிய காஞ்சிபுரம் வாணியர் தர்ம பரிபாலன சங்கம் சார்பில், ஏலவார்குழலி அம்பிகைக்கான திருமாங்கல்யத்தை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க வணிகர் வீதி, நரசிங்கராயர் தெரு, கச்சபேஸ்வரர் மாட வீதி, ராஜ வீதி என, பல்வேறு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக ஏகாம்பரநாதர் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் பக்தர்கள் திருமாங்கல்யத்திற்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இரவு ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலிக்கும் திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது. 


கல்யாண சுந்தரேஸ்வரர்: காஞ்சிபுரம் சண்முகா நகர் விரிவு கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு மஹா அபிேஷகம், மஹா தீப ஆராதனையும், மாலை 4:00 மணிக்கு விஜயகணபதி கோவிலில் இருந்து கோகிலாம்பாள் மணப்பெண் அழைப்பு நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவமும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது.


பாலதர்ம சாஸ்தா கோவில்: காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள பாலதர்ம சாஸ்தா கோவிலில் நேற்று இரவு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண உத்சவம் நடந்தது. உத்சவத்தையொட்டி நேற்று மாலை 4:30 மணிக்கு சிறப்பு அபிேஷகமும், மஹா கணபதி ஹோமமும் நடந்தது. மாலை 6:30 மணிக்கு வள்ளி, தெய்வானை திருக்கல்யாண சங்கல்பம், பூஜை ஹோமம் மற்றும் கலசாபிேஷகமும், இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவமும், தொடர்ந்து சுவாமி புறப்பாடும் நடந்தது.


நகரீஸ்வரர் கோவில்: காஞ்சிபுரம் கிழக்கு ராஜ வீதி, நகரீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு திரவுபதியம்மன் கோவிலில் இருந்து ஜானவாசம் என அழைக்கப்படும் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், பூர்ணா புஷ்கலை சமேத தர்மசாஸ்தா ஆகியோரது திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது.


சத்யநாதேஸ்வரர் கோவில்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு சத்யநாத சுவாமி பிரமராம்பிகை கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உத்சவத்தையொட்டி நேற்று மதியம் 2:30 மணிக்கு சங்கல்பமும், மாலை 4:15 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை ஊர்வலத்தை, தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. மாலை 5.30 மணிக்கு மஹா தீபாராதனையும், மாலை 6:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண உத்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !